ஆடி அமாவாசை: குற்றாலம், பாபநாசத்தில் குவிந்த மக்கள்
குற்றாலம்: குற்றாலத்தில் ஆடி அமாவாசையை முன்னிட்டு முன்னோர்களுக்கு தார்ப்பணம் கொடுப்பதற்காக ஏராளமானோர் அதிகாலையிலேயே குவிந்தனர். மெயினருவியில் சுற்றுலாப் பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருந்து குளித்தனர்.
முன்னோர்களின் ஆத்மா சாந்தியடையவும், அவர்களுக்கு மோட்சம் கிடைப்பதற்காகவும் ஆடி அமாவாசை தினத்தன்று இந்துக்கள் குற்றாலம், ராமேஸ்வரம், பாபநாசம், உள்ளிட்ட புன்னிய தலங்களுக்கு சென்று எள்ளையும், தண்ணீரையும் ஆற்றில் விட்டு முன்னோர்களின் விருப்ப பொருட்கள், அரிசி, காய்கறி தானியங்களை அர்ச்சகர்களுக்கு தானமாக வழங்கியும் தர்ப்பணம் செய்வது வழக்கம்.
புன்னிய தலங்களில் ஒன்றான குற்றாலத்தில் தற்போது சீசன் சமயம் என்பதால் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அதிகமாக உள்ளது. இந்நிலையில் இன்று அதிகாலை தர்ப்பணம் கொடுப்பதற்காக ஏராளமானோர் அருவி பகுதியில் குவிந்தனர். அருவிக்கரையில் வரிசையாக அமர்ந்திருந்த அர்ச்சகர்களிடம் முன்னோர்கள் பெயர், நட்சத்திரம் போன்ற விபரங்களை கூறி எள்ளும், தண்ணீரும் வைத்து தர்ப்பணம் கொடுத்தனர். அதிக கூட்டம் காரணமாக மெயினருவியில் சுற்றுலாப் பயணிகளும், தர்ப்பணம் கொடுத்தவர்களும் நீண்டவரிசையில் காத்திருந்து குளித்தனர்.
இதே போல் பாபநாசம் சிவன்கோவில் முன்பு உள்ள தாமிரபரணி நதிக்கரையில் இன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலையிலேயே முன்னோர்களுக்கு எள்ளும், தண்ணீரும் இறைத்து தர்ப்பணம் கொடுத்தனர். நெல்லை வண்ணாரப்பேட்டை, குறுக்குதுறை, தாமிரபரணி ஆற்றங்கரையிலும் ஏராளமானோர் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.












Click it and Unblock the Notifications