இப்ப ஆரம்பிச்சாத்தான்....ஒரு கல்லுல மூணு மாங்காய் கிடைக்கும்... துடியாய் துடிக்கும் சரத்பவார்
டெல்லியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த தேசியவாத காங்கிரஸின் மூத்த தலைவர்களில் ஒருவரான பிரபுல் பட்டேல், ராஜினாமா செய்யலை, நம்பர் 2 என்கிறதெல்லாம் பிரச்சனையில்லை, கொஞ்சம் முரண்பாடுகள் இருக்கின்றன, காங்கிரஸில் ஒரு குரூப் பிரச்சனையை உருவாக்குகிறது என்று சொல்லியிருப்பது விவகாரம் இன்னமும் முடிவுக்கு வரவில்லை என்பதையே வெளிப்படுத்தியிருக்கிறது.
அதாவது பிரச்சனையை கொளுத்திப் போட்டாச்சு....அறுவடையை அப்புறம் பார்க்கலாம் என்ற ரீதியில் தேசியவாத காங்கிரஸ் களத்தில் இறங்கியிருக்கிறது.
அப்படியென்னதான் தேசியவாத காங்கிரசின் கணக்கு என்கிறீர்களா?
மாங்காய்: 1
மஹாராஷ்டிரா மாநில அரசியலில் காங்கிரஸ்- தேசியவாத காங்கிரஸ் இடையேயான உறவை வலுப்படுத்திக் கொள்வதுடன் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் தமது மருமகன் அஜித் பவாரை முதல்வராக்க முடிவு செய்திருக்கிறார் சரத்பவார். இன்னும் ஓராண்டு காலம் இருந்தாலும் இப்போது இருந்தே இதற்கான பேரத்தை தொடங்கவும் முடிவு செய்திருக்கிறார். சட்டப்பேரவைத் தேர்தலில் கூடுதல் தொகுதிகளை எடுத்துக் கொண்டு மக்களவைத் தேர்தலில் காங்கிரசுக்கு கூடுதல் தொகுதிகளை விட்டுக் கொடுக்கும் பிளான் போட்டிருக்கிறாராம் அஜித் பவார். அப்படி தேசியவாத காங்கிரஸ் கூடுதல் இடங்களில் பேரவைத் தேர்தலில் போட்டியிட்டால் எப்படியும் அஜித்பவாரை முதல்வராக்கிடலாம் என்று நம்புகிறாராம். இப்போதைய கலகக் குரலை அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக இழுத்துக் கொண்டு போய் இந்தப் பேரத்துக்கு காங்கிரசை பணியவைக்கலாம் என திடமாக நம்புகிறார் பவார்.
மாங்காய் 2:
இதுவும் பவாரின் குடும்ப கணக்குதான்! அதாவது தமது மகள் சுப்ரியா சூலேவை மத்திய அமைச்சராக்கிட வேண்டும் என்று விரும்புகிறாராம் பவார். ஆகஸ்ட் முதல்வாரத்தில் அமைச்சரவை மாற்றம் என்பது உறுதியாகிவிட்டது. சுப்ரியாவை எப்படி சூப்பர் பவர் அமைச்சராக்குவது? இருக்கவே இருக்கிறாரே பலி கொடுக்க... அகதா சங்மா.. தேசியவாத காங்கிரஸில் இருந்து சங்மா விலகிவிட்ட நிலையில் அவரது மகளான அகதா இன்னமும் மத்திய அமைச்சராகத்தான் இருக்கிறார். இதைக் கூட சட்டென செய்துவிடப் போவதில்லையாம் பவார்.
இந்த கணக்கு பவார் குறித்திருக்கும் ஒருநாள் ரொம்ப சுவாரசியமானது...
அதாவது என்னைக்கு ராகுல்காந்தியை காங்கிரஸ் அமைச்சரவையில் இணைத்துக் கொள்கிறதோ அதேநாளில் மகள் சுப்ரியாவையும் அமைச்சராக்கி அழகுபார்ப்பது என்று பவார் கால்குலேஷன் போட்டு வைத்திருக்கிறார்.
மாங்காய்: 3
நபார்டு போன்ற முக்கியமான சிலவற்றின் பொறுப்புகளுக்கு சிலரை சரத்பவார் பரிந்துரை செய்திருக்கிறார். ஆனால் இதில் பவாருக்கு அவமானம்தான் ஏற்பட்டதாம். இந்த ஆண்டின் தொடக்கத்தில் பருத்தி ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்தது. ஆனால் சரத்பவார் இதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்தவர் சரத்பவார்.பருத்தி ஏற்றுமதிக்கான தடையை நீக்க வேண்டும் என்று மன்மோகன்சிங்கிடம் அவர் வலியுறுத்தியிருந்தார். இதுபோன்ற முக்கிய முடிவுகளில் தம்மை கலந்து ஆலோசிக்க வேண்டியதற்கேற்ப தமது இருப்பை வலுவாக்கிக் கொள்ளும் வகையில் அரசாங்கத்தின் முக்கிய பொறுப்புகளையும் குறிவைத்துக் கொண்டிருக்கிறாராம் பவார்.
ஆக சரத்பவார் இப்போது தொடங்கி வைத்திருக்கும் கலகம் நன்மையிலேயே (தேசியவாத காங்கிரசுக்கு) முடியுமா?