மண்டபம் அருகே கரை ஒதுங்கிய இலங்கை படகு: போலீசார் விசாரணை
ராமேஸ்வரம்: மண்டபம் அருகே கரை ஒதுங்கிய இலங்கை படகு குறித்து க்யூ பிரிவு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே உள்ள வேதாளை குறவன்தோப்பு அருகே அதிகாலை 6 மணியளவில் பைபர் படகு ஒன்று கரை ஒதுங்கியது. அந்த வழியாகச் சென்ற சிலர் இது குறித்து மண்டபம் வனத்துறை மற்றும் கடலோர காவல் படைக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன் பேரில் வனத்துறை ரேஞ்சர் வெங்கடாசலபதி, கடலோர காவல்படை ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி, சார்பு ஆய்வாளர் ஜோதிபாசு மற்றும் செல்லபாண்டியன் சம்பவ இடத்திற்கு சென்று படகை சோதனையிட்டனர்.
தனுஷா மெரைன் என்று எழுதப்பட்டுள்ள அந்த படகு இலங்கை மன்னார் பகுதியைச் சேர்ந்தது என தெரிய வந்தது.
இது குறித்து போலீசார் கூறுகையில்,
இலங்கை மன்னார் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் பயன்படுத்தும் படகு இது. அதில் மீன்பிடி சாதனங்கள் எதுவும் இல்லை. இலங்கையில் இருந்து அகதிகளை அழைத்துச் செல்லும் ஏஜெண்ட்டுகள் வந்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம் என்றனர்.












Click it and Unblock the Notifications