பள்ளி வாகன பாதுகாப்பு... உச்சநீதிமன்ற வழிகாட்டுதலை கிடப்பில் போட்ட தமிழக அரசு!
நாடு முழுவதும் பள்ளி வாகனங்கள் விபத்தில் சிக்குவதும், அதில் பயணிக்கும் ஆசிரியர்கள், மாணவர்கள் பலியாவதும் அதிகரித்து வருகின்றன. இதையடுத்து உச்சநீதிமன்றம் பள்ளி வாகனங்களில் பின்பற்றப்பட வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து 13 வகையான வழிகாட்டுதலைப் பிறப்பித்து அனைத்து மாநிலங்களுக்கும் உத்தரவிட்டது. மேலும் இந்த வழிகாட்டுதலை அந்தந்த மாநில அரசுகள், மோட்டார் வாகனச் சட்டத்தில் இணைக்கவும் அறிவுறுத்தியிருந்தது. இதை கேரளா உள்ளிட்ட சில மாநிலங்கள்தான் உடனடியாக செய்தன.
ஆனால் தமிழக அரசோ அதை இதுவரை செய்யவில்லை. வெறும் சுற்றறிக்கையை மட்டுமே அனைத்து ஆர்டிஓ அலுவலகங்களுக்கும் அனுப்பி வைத்து விட்டு அமைதியாக இருக்கிறது. ஆர்டிஓ அலுவலகங்களும், சட்டம்தான் இல்லையே என்று அலட்சியமாக செயல்படுகின்றன. பள்ளி நிர்வாகங்களும், ஆர்ஓடி அலுவலகத்தில் காசு கொடுத்துக் கவனித்து விட்டால் போதும் என்று அக்கறையின்றி செயல்படுகின்றனர்.
இத்தனைக்கும் உச்சநீதிமன்றம் அப்படி ஒன்றும் மிகக் கடுமையான வழிகாட்டுதல்களைக் கூறி விடவில்லை
- பள்ளிப் பேருந்துகள், வேன்களில் மஞ்சள் நிற வர்ணம் அடிக்க வேண்டும்
- வாகனத்தின் முன்புறமும், பின்புறமும் -பள்ளி வாகனம்- என எழுத வேண்டும். தனியார் வாகனம் என்றால் -பள்ளி பயன்பாட்டுக்காக- என எழுத வேண்டும்
- பேருந்தில் முதலுதவிப் பெட்டி இருக்க வேண்டும்
- பேருந்தில் வேகக் கட்டுப்பாடு கருவி பொருத்தப்பட வேண்டும்
- ஜன்னல்களில் படுக்கை வாக்கில் கம்பிகள், அதாவது இரும்பு கிரில்கள் பொருத்தப்பட்டிருக்க வேண்டும்
- விபத்தின்போது பேருந்திலிருந்து எளிதாக வெளியேறும் வகையில் -அவசர வழி- ஒன்று பொருத்தப்பட வேண்டும்
- பேருந்தின் மீ்து பள்ளியின் பெயர் மற்றும் தொலைபேசி எண்கள் எழுதப்பட வேண்டும்
- பேருந்தின் கதவுகளில் முறையான பூட்டுகள் இருக்க வேண்டும்
- பேருந்தில் பயணம் செய்யும் குழந்தைகள் தங்களுடைய உடைமைகளை பத்திரமாக வைக்கும் வகையில் இருக்கைகளுக்கு அடியில் கேரியர்கள் வைக்க வேண்டும்
- பேருந்தில் குழந்தைகளுக்கு உதவ உதவியாளர் ஒருவர் இருக்க வேண்டும்
- பேருந்தில் அனைத்து பாதுகாப்பு வசதிகளும் இருப்பதை பெற்றோரோ அல்லது பாதுகாவலரோ உறுதி செய்யவேண்டும். அல்லது, ஆசிரியர் ஒருவர் அந்தப் பேருந்தில் பயணிப்பது சிறந்தது
- பேருந்தின் டிரைவராக நியமிக்கப்படுபவர், குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் கனரக வாகனங்கள் ஓட்டிய அனுபவம் இருக்க வேண்டும்
- ஓர் ஆண்டில் சிக்னலை மதிக்காதது, சாலையில் பஸ் வழித் தடத்தில் செல்லாதது உள்ளிட்ட போக்குவரத்து விதிகளை மீறிய குற்றத்தில் இரண்டு முறை சிக்கிய டிரைவரை பணிக்கு வைக்கக் கூடாது
- இதுபோல் அதிகவேகமாக வாகனத்தை ஓட்டியது, குடித்துவிட்டு பஸ்ûஸ ஓட்டியது உள்ளிட்ட குற்றங்களில் ஒரு முறை சிக்கிய டிரைவரை பணியில் தொடர அனுமதிக்கக் கூடாது.
- பேருந்து, ஒவ்வொரு ஆண்டும் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் தகுதிச் சான்று பெறுவது கட்டாயம்.
இவ்வளவேதான். ஆனால் இதைக் கூட சரிவர கடைப்பிடிக்காமல் பல கல்வி நிறுவனங்கள் செயல்படுகின்றன. இவர்களைக் கட்டுப்படுத்த மோட்டார் வாகனச் சட்டத்தில் இந்த வழிகாட்டுதல்களை ஒரு விதிமுறையாக அரசு சேர்த்தால் மட்டுமே சரிப்படும். அப்போதுதான் அனைவருக்கும் பயம் வரும், முறையாக அனைத்தையும் செய்வார்கள். இதை தமிழக அரசு உடனே செய்ய வேண்டும் என்று அனைத்துத் தரப்பினரும் எதிர்பார்க்கின்றனர்.