களக்காட்டில் 'டொக்கு' பேருந்தில் செல்லும் மாணவர்கள்: கவனிக்குமா தமிழக அரசு?
நெல்லை: களக்காடு பகுதியில் இயக்கப்படும் பழுதடைந்த அரசு பேருந்துகளில் தான் மாணவர்களை பயணம் செய்கின்றனர். விபத்து எதுவும் ஏற்படும் முன்பு அந்த பேருந்துகளை மாற்ற வேண்டும் என்று அப்பகுதி மக்கள் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
நெல்லை மாவட்டம் களக்காட்டில் பழுதடைந்து ஓடிக் கொண்டிருக்கும் பழைய பேருந்துகளை ஓரம் கட்டிவிட்டு புதிய பேருந்துகளை இயக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து களக்காடு பேரூராட்சி தலைவர் நெல்லை மாவட்ட கலெக்டர் மற்றும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு கோரிக்கை விடுத்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
களக்காடு-நாங்குநேரி தடத்தில் வளளியூர் டெம்போவைச் சேர்ந்த பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த பேருந்துகள் மிகவும் பழுதடைந்து காணப்படுகிறது. இருக்கைகள் கிழிந்தும், கம்பிகள் வெளியே துருத்திக் கொண்டும் இருக்கிறது. வெளியே தகரங்கள் நீண்டு கொண்டு இருக்கிறது.
மேலும் அடிக்கடி பழுதாகி நின்று விடுவதால் பேருந்துகளின் ஓட்டமும் தடைபடுகிறது. சென்னையில் பேருந்தின் ஓட்டை வழியாக மாணவி விழுந்து பலியானதைத் தொடர்ந்து நீதிமன்ற உத்தரவுப்படி பள்ளிப் பேருந்துகள், வேன்கள் ஆய்வு செய்யப்பட்டு மோசமான நிலையில் உள்ள வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதே போல் களக்காடு பகுதியிலும் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு ஓட்டை பேருந்துகளை அப்புறப்படுத்தி வி்ட்டு புதிய பேருந்துகளை இயக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications