சாலை கோரி திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் முன் எம்.எல்.ஏ. பாலபாரதி உண்ணாவிரதம்
திண்டுக்கல்: சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் மூலம் தார் சாலை அமைக்க அளிக்கப்பட்ட உத்தரவை நிறைவேற்ற கோரி, திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு எம்.எல்.ஏ. பால பாரதி உண்ணாவிரதத்தை துவங்கி உள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் பி.டபுள்.இ. காலனியில் பொது மக்கள் பயன்படுத்தி வந்த சாலையில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து தார் சாலை அமைக்க மாவட்ட கலெக்டர் அனுமதி வழங்கினார்.
ஆனால் திண்டுக்கல் சரக காவல்துறை துணைத் தலைவர், மேற்கண்ட இடம் காவல்துறைக்கு சொந்தமானது என்று கூறி சாலை அமைக்க அனுமதி மறுத்தார். இதையடுத்து இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எம்.எல்.ஏ. பாலபாரதி, திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு உண்ணாவிர போராட்டத்தை துவங்கி உள்ளார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திண்டுக்கல் மாவட்ட செயலாளர் என்.பாண்டி, நகர செயலாளர் ஆசாத், ஒன்றிய செயலாளர் அஜய் கோஷ் மற்றும் அப்பகுதியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் உண்ணாவிரத போராட்டத்தில் பாலபாரதி உடன் சேர்ந்துள்ளனர்.