தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயில் விபத்து: 18 பேரின் உடல்கள் அடையாளம் தெரியவில்லை
சென்னை: தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயில் தீ விபத்தில் பலியான 32 பேரில் 18 பேரின் உடல்கள் இன்னும் அடையாளம் தெரியவில்லை. அடையாளம் காணப்பட்ட 14 பேரில் 11 பேரின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
டெல்லியில் இருந்து சென்னைக்கு வந்த தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயில் கடந்த திங்கட்கிழமை அதிகாலை 4.30 மணி அளவில் ஆந்திர மாநிலம் நெல்லூரை கடக்கையில் எஸ் 11 பெட்டியில் தீப் பிடித்தது. இதில் அந்த பெட்டியில் பயணம் செய்தவர்களில் 32 பேர் உடல் கருகி பலியாகினர். மேலும் 27 பேர் காயம் அடைந்தனர். காயமடைந்தவர்கள் நெல்லூர் அரசு மருத்துவமனை உள்பட 5 மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர். அதில் 4 பேர் சென்னை பெரம்பூரில் உள்ள ரயில்வே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த விபத்தில் பலியான 32 பேரில் 18 பேரின் உடல்கள் இன்னும் அடையாளம் தெரியவில்லை. 14 பேரின் உடல்கள் தான் அடையாளம் காணப்பட்டுள்ளன. அதில் தமிழகத்தைச் சேர்ந்த 6 பேர் அடக்கம். அடையாளம் காணப்பட்ட உடல்களில் 11 பேரின் உடல்கள் அவர்களின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ளவர்களின் உடல்களை அடையாளம் காணும் முயற்சியில் ரயில்வே அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.