கத்தரிக்காய் சாகுபடியும் சரியில்லை, விலையும் சரியில்லை: வேதனையில் விவசாயிகள்
நெல்லை மாவட்டம் கீழப்பாவூர் அருகே உள்ள கண்டமங்கலம் கத்தரிக்காய்க்கு பெயர்போன ஊர். வேறு பகுதி விவசாயிகள் வீரிய விதைக்கு மாறிய நிலையிலும் இந்த ஊர் விவசாயிகள் நாட்டு விதைகளை பாதுகாத்து சுவையான கத்தரிக்காய்களை விளைவிக்கின்றனர். சில வருடங்களுக்கு முன்பு வரை கத்தரி பயிரிடுவதற்கு ரசாயன உரம் இடுவதில்லை. பூச்சிகொல்லி மருந்தும் பயன்படுத்துவதில்லை. தற்போது மண் வளம் குன்றியதால் ரசாயன உரங்கள் பயன்படுத்தப்படுகிறது. நடுகையிட்டு 40 நாட்களில் நல்ல பலன் கொடுக்கிறது.
கண்டமங்கலம் குளத்து பாசனத்தில் 100 ஏக்கர் நிலம் உள்ளது. சாரல் மழை இல்லாததால் குளத்துக்கு தண்ணீர் இல்லை. கிணறுகளிலும் நீர்மட்டம் குறைந்துவிட்டது. இந்த சூழலில் கத்தரிக்காய் சாகுபடி அளவு மிகவும் குறைந்துவிட்டது. சாரல் மழை இல்லாததால் பயிரிட்ட கொஞ்சநஞ்ச கத்தரியும் நோயில் கருகுகிறது. இந்த வருடம் கத்தரிக்காய்க்கு சரியான விலையும் கிடைக்கவில்லை. கத்தரி பயிரிட உழவு, உரம், களை, காய் பறிப்பதற்கு ஒரு ஏக்கருக்கு ரூ.1,000 வரை செலவாகிறது.
அப்படி இருக்கையில் கத்தரிக்காய் கிலோ ரூ.10க்கு மேல் விற்றால்தான் விவசாயிகளுக்கு கட்டுப்படியாகும். ஆனால் தற்போது ஒரு கிலோ ரூ.4க்கு விற்பனையாகிறது. இதனால் விவசாயகளுக்கு கடும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.