எஸ்ஸார் கோபியின் தம்பி மருதுவை திருப்பூரில் வைத்துத் தூக்கினார் எஸ்.பி. அஸ்ராகார்க்!
திருப்பூர்: மதுரையின் முக்கிய திமுக பிரமுகர்களில் ஒருவரும், மு.க.அழகிரியின் தரப்பைச் சேர்ந்தவர்களில் முக்கியஸ்தருமான எஸ்ஸார் கோபியின் தம்பி மருதுவை, திருப்பூரில் மாவட்ட எஸ்.பி. அஸ்ரா கார்க் வாகன சோதனை நடத்தியபோது அதிரடியாக கைது செய்தார்.
மதுரை மாவட்ட எஸ்.பியாக இருந்தவர் அஸ்ரா கார்க். தற்போது திருப்பூர் எஸ்.பியாக உள்ளார்.
மதுரையில் கார்க் எஸ்.பியாக இருந்தபோது அதிரடியாக செயல்பட்டார். மதுரையில் ஆட்டோ டிரைவராக இருந்தவர் பாண்டியராஜன். இவர் படுகொலை செய்யப்பட்டார். இந்தக் கொலைக்குக் காரணம், எஸ்ஸார் கோபியின் தம்பியான மருதுதான் என்று கூறப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கில் மருதுவைத் தேடி வந்தனர் போலீஸார். இந்த வழக்கை கார்க் நேரடியாக கண்காணித்து விசாரித்து வந்தார்.
கார்க்கின் அதிரடி கிடுக்கிப் பிடியால் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்தார் மருது. இந்த நிலையில், திருப்பூரில் வாகன தணிக்கையில் கார்க் நேரடியாக ஈடுபட்டிருந்தார். அப்போது ஒரு காரில் பயணித்த மருதுவை அடையாளம் கண்ட அவர் அங்கேயே அவரைக் கைது செய்ய உத்தரவிட்டார். பின்னர் மருதுவை மதுரை போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.
இதையடுத்து அவனியாபுரம் கொண்டு வரப்பட்ட மருது, அங்குள்ள காவல் நிலையத்தில் வைத்து தீவிரமாக விசாரிக்கப்பட்டு வருகிறார்.
எஸ்ஸார் கோபி தம்பி மருதுவை, எஸ்.பி. கார்க் நேரடியாக கைது செய்த சம்பவம் மதுரை திமுக வட்டாரத்தை அலற வைத்துள்ளது.