'மலை முழுங்கி' மதுரை குவாரிகளில் அதிகாரிகள் சோதனையாம்..!!
மதுரை முன்னாள் கலெக்டர் சகாயம், சமீபத்தில் அரசிடம் தாக்கல் செய்த அறிக்கையில், மதுரையில் உள்ள கிரானைட் குவாரிகளில் நடைபெற்ற முறைகேட்டின் மூலம் அரசுக்கு ரூ.16,000 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறியிருந்தார்.
மதுரை மாவட்டம் மேலூர் வட்டத்தில் கீழவளவு, கீழையூர், மலம்பட்டி, செம்மினிப்பட்டி ஆகிய பகுதிகளில் சட்டவிரோதமாக குவாரிகளை அமைத்து கிரானைட் கற்களை வெட்டி கடத்தி வருகின்றனர்.
நீங்கள் சில ஆண்டுகளுக்கு முன் மதுரையில் காரைக்குடிக்கு பஸ்சில் போனால் மேலூரைத் தாண்டியதும் கீழவளவு பகுதியில் தொடர் மலைகளைப் பார்த்திருப்பீர்கள். இப்போது போனால் மலை இருந்த இடங்களில் பெரிய பெரிய ராட்சத பள்ளங்களே உள்ளன.
இங்கிருந்த பல மலைகளையே காணவில்லை என்பதே உண்மை. மலையையே வெட்டி எடுத்துவிட்ட இந்தக் கும்பல் இப்போது தரைக்கு அடியில் தோண்ட ஆரம்பித்துவிட்டது.
கிட்டத்தட்ட மலை உயரத்துக்கு கீழேயும் தோண்டி விலையுயர்ந்த கிரானைட் கற்களை வெட்டி எடுத்து ஏற்றுமதி செய்து பில்லியன் கணக்கில் சம்பாதித்து வருகின்றனர். இதனால் இந்த கிராமங்களுக்கு நயா பைசா பயனில்லை என்பதே கொடுமை. குவாரிகளால் ஏற்படும் தூசியைத் தவிர இந்த மக்களுக்கு ஏதும் கிடைப்பதில்லை.
உலகளவில் Madura Gold Granite என்பது மிகப் பிரபலமான, விலை உயர்ந்த கிரானைட் ஆகும்.
ஆளும் கட்சியினரையும், அதிகாரிகளையும் கையில் போட்டுக் கொண்டு அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமாக கிரானைட் கற்களை வெட்டி கடத்துவதும், அரசு புறம்போக்கு நிலங்கள், பொது நடைபாதைகள், தலித்துகளுக்கு வழங்கப்பட்ட பஞ்சமி நிலங்கள் போன்றவற்றையும் கிரானைட் குவாரி உரிமையாளர்கள் ஆக்கிரமித்து கிரானைட் கற்களை வெட்டி எடுப்பதும் நடந்து வருகிறது.
இதைத் தடுக்க வேண்டிய வருவாய்த்துறை, கனிம வளத்துறை அதிகாரிகள் அவர்களுக்கு உடந்தையாக உள்ளனர். காரணம், ஆளும் கட்சிக்கு இந்த குவாரி உரிமையாளர்கள் தந்துவிடும் கப்பம்.
இந் நிலையில் கலெக்டராக இருந்த சகாயம் இந்தக் கும்பலை ஒடுக்க நடவடிக்கையில் இறங்கிய உடனேயே அவர் இடமாற்றம் செய்யப்பட்டார். ஆனாலும் அவர் தான் பதவியில் இருந்தவரை நடத்திய விசாரணையை வைத்து அரசிடம் அறிக்கையை தாக்கல் செய்துவிட்டார்.
இதனால் விசாரணை நடத்த வேண்டிய நிலைக்கு அரசு தள்ளப்பட்டுள்ளது.
இந் நிலையில் 18 குழுக்களாக அதிகாரிகள் இன்று பல்வேறு குவாரிகளில் சோதனை நடத்தி வருகின்றனர். மதுரை கலெக்டர் அன்சுல் மிஸ்ராவின் உத்தரவின் பேரில் இந்த சோதனைகள் நடக்கின்றனவாம்.
அதாவது சகாயம் அறிக்கை தராதவரை இப்படி குவாரி பிராடு நடப்பதே தெரியாத மாதிரியும் இப்போது தான் விவரம் தெரிந்து சோதனைக்குப் போவது போலவும் இந்த அதிகாரிகள் குழு சென்றுள்ளது.
இந்த சோதனைகளையடுத்து குவாரி உரிமையாளர்கள் மீது நடவடிக்கை ஏதும் பாயாவிட்டால், இது வெறும் டுபாக்கூர் ரெய்ட் என்பதே உண்மை.