2ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டு ஏலத்துக்கான விலை நிர்ணயம்- மொபைல் கட்டணம் உயருகிறது
பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நேற்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில், அலைக்கற்றை ஒதுக்கீட்டு ஏலத்துக்கான குறைந்தபட்ச விலையை ரூ.14,000 கோடி முதல் ரூ.15,000 கோடியாக நிர்ணயிக்கலாம் என முடிவு செய்யப்பட்டது. மேலும், அலைக்கற்றை பயன்பாட்டுக்கு ஆண்டு கட்டணமாக வருவாய் அடிப்படையில் 3 முதல் 8 விழுக்காடு வரை வசூலிக்கவும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துளது.
இந்த கட்டணங்களைத்தான் ப.சிதம்பரம் தலைமையிலான அதிகாரம் அளிக்கப்பட்ட அமைச்சரவை குழு ஏற்கெனவே பரிந்துரை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
ஆனால் ஒவ்வொரு நிறுவனமும் 5 மெகாஹெர்ட்ஸ் அலைவரிசையை வாங்க வேண்டும் என்றும் இதற்கான அடிப்படை விலையை ரூ.18,000 கோடியாக நிர்ணயிக்கலாம் என்றும் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) மத்திய அரசுக்கு பரிந்துரை செய்திருந்தது.
இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்த தொலைத் தொடர்பு நிறுவனங்கள், குறைந்தபட்ச ஏலத் தொகையை 80 விழுக்காடு வரை குறைக்க வேண்டும் என்றும் இல்லாவிட்டால் செல்போன் கட்டணங்களை 100 விழுக்காடு உயர்த்த நேரிடும் என்றும் கூறி இருந்தன. ஆனால், வெறும் 20 விழுக்காடு அளவுக்கு மட்டுமே குறைக்கப்பட்டுள்ளதால் அந்நிறுவனங்கள் அதிருப்தி அடைந்துள்ளன.
இதனால் செல்போன் நிறுவனங்கள், செல்போன் கட்டணங்களை நிமிடத்துக்கு 30 பைசா உயர்த்தப் போவதாக அறிவித்துள்ளன. அலைக்கற்றை ஒதுக்கீட்டு ஏலத்துக்கான குறைந்தபட்ச விலையை ரூ.14 ஆயிரம் கோடியாக நிர்ணயிக்கப்பட்டதால் இத்துறையின் வளர்ச்சி கடுமையாக பாதிக்கப்படும். குறிப்பாக, இத்துறை சார்ந்த நிறுவனங்களுக்கு ரூ.3.2 லட்சம் கோடி நிதிச் சுமை ஏற்படும். இதனால் செல்போன் கட்டணமும் உயரும் எனக் கூறப்படுகிறது.