பாஜகவிலிருந்து விலகுவதாக கேசுபாய் பட்டேல் அறிவிப்பு- புதிய கட்சியின் பெயரை அறிவிக்க திட்டம்
இது தொடர்பாக காந்திநகரில் ஆர்.எஸ்.எஸ். பிரமுகர்கள் பிரவீன்மனியன், பாஸ்கர்ராவ், பாரதிய கிஷன்சங் தலைவர் லால்ஜிபாய் பட்டேல், மஹாகுஜராத் ஜனதா கட்சித் தலைவர் ஜோர்தான் ஜதாபியா மற்றும் முன்னாள் முதல்வர் சுரேஷ் மேத்தா ஆகியோருடன் கேசுபாய் பட்டேலும் காஷிராம் ரானாவும் ஆலோசனை நடத்தினர். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கேசுபாய், உண்மையான பாரதிய ஜனதாவாக செயல்படக் கூடிய புதிய கட்சிக்கான அறிவிப்பு வெளியிடப்படும் என்றார் .
மேலும், குஜராத் முதல்வர் நரேந்திர மோடியின் தன்னிச்சையான செயல்பாடுகள் குறித்து தாங்கள் தெரிவித்த புகார் தொடர்பாக பாஜக மேலிடம் சமாதான நடவடிக்கைகள் மேற்கொண்டது. ஆனாலும் நிலைமை சீராகவில்லை. இதனால் கட்சியிலிருந்து விலக வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது என்று பாஜக தலைவர் நிதின்கட்காரிக்கு ஃபேக்ஸ் மூலம் விலகல் கடிதத்தையும் தனித்தனியாக கேசுபாய் பட்டேல் ஆதரவாளர்கள் அனுப்பி வைத்துள்ளனர்.
இப்படி தனிக்கட்சி தொடங்கும் முடிவை மேற்கொள்வேன் என்று தாம் ஒருபோதும் நினைக்கவில்லை என்றும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் தாம் விலகிக் கொள்கிறேன் என்றும் கேசுபாய் பட்டேல் தமது விலகல் கடிதத்தில் கூறியுள்ளார்.
83 வயதாகும் கேசுபாய் பட்டேல் 60 ஆண்டுகால பொதுவாழ்க்கைக்கு சொந்தக்காரர். குஜராத்தில் பாரதிய ஜனதாவை வலுப்படுத்தியதில் முக்கியப் பங்கு வகித்தவர். குஜராத் மாநில முதல்வராக பதவி வகித்தவர். இவருக்கு எதிராக மோடி விஸ்வரூபமெடுக்க இப்போது மோடியின் ஆதிக்கத்தில் குஜராத் பாஜக இருக்கிறது.
இந்த ஆண்டின் இறுதியில் குஜராத் சட்டப்பேரவைக்கான தேர்தல் நடைபெற உள்ள நிலையில் கேசுபாய் பட்டேலின் விலகலானது பாஜகவுக்கு பாதிப்பை ஏற்படுத்துமா? என்ற விவாதம் இப்போது சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கிறது.