நித்தியுடன் வர திட்டமிட்ட மதுரை ஆதீனத்தை சந்திக்க மறுத்த தர்மபுரம் ஆதீனம்!
திருத்துறைப்பூண்டி: நித்யானந்தா குறித்து பதில் கூறி சலித்து விட்டது. எனவே அவர் குறித்து கேள்வி கேட்காதீர்கள் என்று மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் கூறினார்.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே மதுரை ஆதீனத்துக்குச் சொந்தமான கச்சனம் கைக்கினேஸ்வரர் கோவிலுக்கு வந்த ஆதீனம் நிருபர்களிடம் கூறுகையில்,
வட இந்திய புனித யாத்திரைக்குச் செல்லும் இந்துக்களுக்கு மாநில அரசு சலுகைகள் அறிவித்துள்ளதை பாராட்டுகிறோம். கோவில் சன்னிதானத்தில் ஏழை, பணக்காரன், நடுத்தர வர்க்கம் என்ற பாகுபாடு இல்லை. ஆனால் தரிசனக் கட்டணம் என்ற பெயரில் வசூல் செய்வதை அரசு ரத்து செய்ய வேண்டும்.
காவிரி டெல்டா மாவட்டங்களில் மேட்டூர் அணையில் போதிய தண்ணீர் இல்லாததாலும் காலத்தோடு மழையும் பெய்யாத நிலையில் வறட்சி ஏற்பட்டு விவசாயிகள் வாடும் நிலை ஏற்பட்டுள்ளது. அன்று திருவையாறில் திருஞானசம்பந்தர் மழை பெய்வதற்காக பதிகம் பாடியுள்ளார். அப்பதிகத்தை பாடி கூட்டு வழிபாடு நடத்தினால் மழை பொழியும் என்று 'பொதுவாக'ப் பேசினார்.
இதையடுத்து அவரிடம், மயிலாடுதுறையில் இருக்கும் தர்மபுரம் ஆதீனத்தை ஏன் நீங்கள் சென்று நேரில் சந்திக்கவில்லை? என்ற கேட்டதற்கு, மே 5ம் தேதி அவரை நான் சந்திக்க அனுமதி கொடுத்தார். ஆனால் நித்யானந்தாவுடன் வந்தால் அனுமதியில்லை என மறுத்துவிட்டார். இதனால் சந்திக்கவில்லை. காலம் நேரம் வரும்போது நல்ல செய்தியை கூறுவேன் என்றார்.
நித்யானந்தா குறித்த உங்களின் நிலைப்பாட்டில் மாற்றம் உண்டா? என்று கேட்டதற்கு, இது குறித்து பதில் கூறி, பதில் கூறியே சலித்து விட்டது. அது குறித்து எதுவும் கேள்விகள் கேட்க வேண்டாம் என்று எஸ்கேப் ஆனார்.
கைலாயத்தில் உள்ள நித்யானந்தா நடிகை ரஞ்சிதாவை உடன் அழைத்துச் சென்றது எனக்குத் தெரியாது என சில நாட்களுக்கு முன் ஆதீனம் கூறியது நினைவுகூறத்தக்கது.












Click it and Unblock the Notifications