டெசோ மாநாட்டுக்கு அனுமதி மறுப்பது ஜனநாயக உரிமையை குழிதோண்டிப் புதைப்பதாகும்! - வைகோ
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
சிங்கள அரசு நடத்திய ஈழத் தமிழர் இனப்படுகொலைக்கு மத்திய காங்கிரஸ் அரசு உடந்தையாக இருந்தது. அந்த அரசில் தி.மு.க.வும் அங்கம் வகித்தது. தமிழக மக்களையும் ஈழத் தமிழர்களையும் ஏமாற்றவே டெசோ மாநாடு நடக்கிறது. இந்திய அரசின் நடவடிக்கைகளுக்கு உதவுவதற்காகவே மாநாட்டு தேதி மாற்றப்பட்டது தமிழ் ஈழத்துக்காக தீர்மானம் நிறைவேற்றப் போவது இல்லை என்று சொன்னது ஏமாற்று வேலை.
கருணாநிதி ஆட்சியில் இருந்த போது தமிழ் ஈழத்துக்கு ஆதரவான பொதுக் கூட்டங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. தேச பாதுகாப்பு சட்டம் ஏவப்பட்டது பழ நெடுமாறன் கூட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டது. ஈழத் தமிழரை ஆதரித்து பேசிய நாஞ்சில் சம்பத், சீமான், உள்ளிட்டோர் தேசிய பாதுகாப்புப்படி சிறையில் பூட்டப்பட்டனர். என் மீதும் வழக்குகள் போடப்பட்டன. எனவே பேச்சு உரிமை பற்றி குரல் கொடுக்கும் தகுதி அவருக்கு இல்லை.
மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் சந்தித்து விட்டு போன மறு நாள் தமிழ் ஈழ ஆதரவு மாநாடு என தலைப்பையே மாற்றிவிட்டார். மாநாட்டில் ஈழம் என்ற சொல்லை பயன்படுத்தக் கூடாது என்று மத்திய அரசின் வெளி விவகாரத்துறை அமைச்சகம் அறிவித்து தனது துரோக முகத்தை காட்டி விட்டது.
மாநாட்டுக்கு காவல் துறை அனுமதி மறுத்து இருப்பது ஜனநாயக உரிமைகளை குழிதோண்டி புதைப்பதாகும். தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்தை ஆதரித்து பேச உரிமை உண்டு என்று நீதிமன்றத் தீர்ப்பை பெற்று இருக்கிறோம். தமிழ் ஈழம் என்று உச்சரிப்பதை தடுக்க உலகில் எந்த சக்தியாலும் முடியாது என்று அதில் வைகோ தெரிவித்துள்ளார்.