ரூ.16,000 கோடி கிரானைட் முறைகேடு: கிரானைட் நிறுவன அதிபர்களுக்கு போலீசார் வைத்த செக்
மதுரை: கிரானைட் முறைகேட்டில் ஈடுபட்ட குவாரி நிறுவன அதிபர்கள், பங்குதாரர்கள், இயக்குனர்கள் வெளிநாடு தப்பி செல்வதை தடுக்க அனைத்து விமான நிலையங்களிலும் இமிகிரேஷன் பிரிவு உஷார்படுத்தப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டத்தில் கிரானைட் கற்களை வெட்டி எடுத்ததில் ரூ.16,000 கோடி அளவுக்கு முறைகேடு நடந்துள்ளது. இது தொடர்பாக கடந்த 2ம் தேதி முதல் கிரானைட் குவாரிகளில் மதுரை மாவட்ட கலெக்டர் அன்சுல் மிஸ்ரா உத்தரவின் பேரில் தொடர்ந்து சோதனை நடந்து வருகிறது. மேலூர் பகுதியில் உள்ள குவாரிகளில் நடந்த ஆய்வில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டன. மேலும் தெற்கு தெருவில் உள்ள பி.ஆர்.பி. கிரானைட் அலுவலகம் சீல் வைக்கப்பட்டது. பி.ஆர்.பி. உள்பட 5 குவாரி நிறுவனங்கள் மீது இதுவரை 12 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. குவாரி ஊழியர்கள் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். அரசுக்கு சொந்தமான குவாரிகளில் வெட்டி எடு்க்கப்பட்டு பல்வேறு இடங்களில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கிரானைட் கற்களின் நீளம், அகலம், உயரம் கணக்கிடும் பணி நடந்து வருகிறது.
குவாரி முறைகேடு தொடர்பாக பி.ஆர்.பி. கிரானைட் அதிபர் பி.ஆர். பழனிச்சாமி, அவரது மகன்கள் சிந்து கிரானைட் செல்வராஜ் உள்பட பலர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளனர். இந்நிலையில் கிரானைட் அதிபர்கள் வெளிநாடு தப்பிச் செல்லாமல் இருக்க முறைகேட்டில் தொடர்புடைய கிரானைட் அதிபர்கள், பங்குதாரர்கள், இயக்குனர்கள் ஆகியோரை கண்காணிப்புக்கு உட்பட்ட நபர்கள் என அறிவித்து அவர்களின் நடவடிக்கைகளை கண்காணி்க்க அனைத்து விமான நிலையங்களிலும் இமிகிரேஷன் பிரிவுக்கு தகவல் அனுப்பப்பட்டுள்ளது.