தீவனம், தண்ணீர் இல்லை : ஈமுக்கோழிகள் இறக்கும் பரிதாபம்!
ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் சுமார் 16 ஈமுக்கோழி பண்ணைகள் செயல்பட்டு வருகின்றன. குன்னத்தூர் ரோட்டில் உள்ள சுசி ஈமுக்கோழிப்பண்ணை முதலீட்டாளர்களுக்கு வளர்ப்புக்கூலி வழங்கப்படவில்லை என்று கூறி முதலீட்டாளர்கள், பண்ணையையும், அலுவலகத்தையும் முற்றுகையிட்டார்கள்.
அதைத் தொடர்ந்து சுசி ஈமுக்கோழி பண்ணையின் உரிமையாளர் குரு உள்பட நிர்வாகிகள் 8 பேர் தலைமறைவாகி விட்டார்கள். அந்த நிறுவனத்துக்கு எதிராக இதுவரை 2,466 மனுக்கள் பெறப்பட்டுள்ளது.
இதேபோல் பெருந்துறையில் உள்ள க்வின் நிறுவனத்துக்கு சொந்தமான பண்ணைகளில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஈமுக்கோழிகள் வளர்க்கப்பட்டு வருகிறது. அங்கு பராமரிப்பு பணியில் ஈடுபட்டு இருந்த வடநாட்டு வாலிபர்கள் திடீரென மாயமாகி விட்டார்கள். நிர்வாகிகளும் பணியாளர்களும் இல்லாததால் சுசி ஈமு பண்ணையில் உள்ள 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஈமுக்கோழிகள் தீவனமின்றி பசியால் மயங்கி விழத்தொடங்கின.
கடந்த 2 நாட்களாக தண்ணீர், தீவனம் இல்லாமல் சுமார் 20 ஈமுக்கோழிகள் அங்கு பசியால் பரிதாபமாக இறந்துவிட்டன. இறந்து கிடந்த ஈமுக்கோழிகளை அப்புறப்படுத்தக்கூட ஆள் இல்லாமல் மற்ற கோழிகள் பசியில், இறந்த கோழிகளை கொத்தி தின்றன. இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசத்தொடங்கியது.
இதையடுத்து அங்கு விரைந்து சென்ற அதிகாரிகள், பண்ணை வளாகத்திலேயே 4 அடிக்கு குழிதோண்டி இறந்த ஈமுக்கோழிகளை புதைத்தார்கள். மேலும் நூற்றுக்கணக்கான ஈமுக்கோழிகள் பசியால் மயங்கிய நிலையில் காணப்படுகின்றன.
இதனால் திண்டுக்கல்லை சேர்ந்த ஒரு தீவன நிறுவனத்தில் இருந்து 10 டன் தீவனங்களை பெற்று ஈமுக்கோழிகளுக்கு அதிகாரிகள் வழங்கி வருகிறார்கள். ஆனால், கையிருப்பு உள்ள தீவனங்கள் இன்னும் 2 நாட்களுக்குள் தீரும் நிலை உள்ளது.
ஒரு சில பண்ணைகளில் பணியாளர்கள் மட்டும் உள்ளனர். சில பண்ணைகள் பூட்டப்பட்டு உள்ளன. இதனால் மாவட்டம் முழுவதும் சுமார் 15 ஆயிரம் ஈமுக்கோழிகள் தண்ணீரும், தீவனமும் இல்லாமல் தவிக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. இதேபோல் பல்வேறு கோழிப்பண்ணைகளிலும் மோசடி நடைபெற்று உள்ளது. மற்ற ஈமுக்கோழி பண்ணை உரிமையாளர்களும் தப்பிவிடாமல் இருக்க மாவட்ட போலீஸ் அதிகாரிகளும், வருவாய்த்துறை அதிகாரிகளும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
இதற்கிடையில், தமிழகம் முழுவதும் 15 மாவட்டங்களில் உள்ள மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் அலுவலகத்தில், பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் புகார் செய்தால் அதனை பெற்று வழக்குப்பதிவு செய்யவேண்டும் என்று மாநில பொருளாதார குற்றப்பிரிவு ஐ.ஜி.ஆறுமுகம் உத்தரவிட்டு உள்ளார்.