யுரோனியம் எரிப்பொருளை நிரப்ப அனுமதி-கூடங்குளத்தில் 144 தடை சட்டம் அமல்
நெல்லை: கூடங்குளம் அணுமின் நிலையத்தின் முதல் அணுஉலையில் மின் உற்பத்தியை துவங்க யுரோனியம் எரிப்பொருளை பயன்படுத்த இந்திய அணுசக்தி ஒழுங்கு முறை ஆணையம் அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து கூடங்குளத்தில் 144 தடை உத்தரவுடன் கூடிய கடும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்தின் முதலாவது அணுஉலையில் மின்உற்பத்தி துவங்கும் வகையில், யுரோனியம் எரிப்பொருளை நிரப்ப, இந்திய அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி அளித்துள்ளது. எனவே விரைவில் மின் உற்பத்தியை துவங்கும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
கூடங்குளத்தில் மின்உற்பத்தியை தடை செய்ய கோரி, கூடங்குளத்தில் போராட்டம் நடைபெற வாய்ப்பு உள்ளது. எனவே கூடங்குளம் பகுதியில் இருந்து 7 கி.மீ. அளவிற்கு சுற்றளவிற்கு, 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. மேலும் 12 கம்பெனி போலீசார் பாதுகாப்பு பணியில் இரவு பகலாக ஈடுபட்டு வருகின்றனர். பாதுகாப்பை வலுப்படுத்தும் வகையில், மத்திய பாதுகாப்பு படையை சேர்ந்த 125 வீரர்கள் இன்று கூடங்குளத்திற்கு வந்து சேர்ந்தனர்.
இந்த நிலையில் கூடங்குளத்தில் அணுஉலையை செயல்படுத்த தடை விதிக்க கோரும் எதிர்ப்பாளர்கள், வரும் 15ம் தேதி சுதந்திர தினத்தை கறுப்பு தினமாக அனுசரிக்க போவதாக அறிவித்துள்ளனர். இதன் ஒரு பகுதியாக கூடங்குளம், இடிந்தகரை பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் இன்று கடலுக்கு செல்லவில்லை. மேலும் கூடங்குளம் பகுதியில் உள்ள கடைகளும் அடைக்கப்பட்டிருந்தது.