ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு -புதிய வழக்கறிஞர் நியமிக்கப்படும் வரை ஆச்சார்யா நீடிப்பார்?

ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் கடந்த 2005-ம் ஆண்டு உச்சநீதிமன்றத்தால் அரசு தரப்பு சிறப்பு வழக்கறிஞராக நியமிக்கப்பட்டவர் ஆச்சார்யா. இவர் திடீரென இந்தப் பொறுப்பில் இருந்து விலகிக் கொள்வதாக கர்நாடக உள்துறை செயலருக்கு கடிதம் அனுப்பியிருந்தார். அதில் மன உளைச்சல் காரணமாக இம்முடிவை மேற்கொண்டதாகத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் பெங்களூர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி மல்லிகார்ஜூனையா நியமனத்தை ரத்து செய்யக் கோரி சசிகலா தரப்பில் தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனு இன்று கர்நாடக உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிமன்றத்திற்கு ஆச்சார்யாவும் வந்திருந்தார். தம்மை இந்த வழக்கில் இருந்து விடுவிக்க நீதிபதியிடம் அவர் கேட்டுக் கொண்டார். இதைக் கேட்ட நீதிபதி என்ன காரணத்துக்காக விலகுகிறீர்கள் என்று ஆச்சார்யாவிடம் கேள்வி எழுப்பினார். தமது தனிப்பட்ட காரணங்களால்தான் என்று ஆச்சார்யா பதிலளித்தார். தமிழக லஞ்ச ஒழிப்புத் துறையினர் சரியான ஒத்துழைப்பு கொடுக்கவில்லையா என்று மீண்டும் நீதிபதி கேள்வி எழுப்பியபோது அப்படியெல்லாம் இல்லை என்று ஆச்சார்யா கூறினார்.
இதைத் தொடர்ந்து அடுத்த சிறப்பு வழக்கறிஞர் நியமிக்கப்படும்வரை வழக்கில் ஆஜராகுமாறு நீதிபதி கேட்டுக் கொண்டார். இதை ஆச்சார்யாவும் ஏற்றுக் கொண்டார். இதனால் நாளை நடைபெற உள்ள சொத்துக் குவிப்பு வழக்கின் விசாரணையின் போது தனிநீதிமன்றத்தில் ஆச்சார்யா ஆஜராகக் கூடும் எனத் தெரிகிறது.
இதனிடையே நீதிபதி மல்லிகார்ஜூனையாவின் நியமனத்துக்கு எதிராக மேல்முறையீட்டு மனு மீது பதிலளிக்க கர்நாடக அரசு தரப்பில் கூடுதல் கால அவகாசம் கோரப்பட்டது. இதை ஏற்ற நீதிபதி வரும் 28-ந் தேதி வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தார்.












Click it and Unblock the Notifications