ராஷ்டிரபதி பவனில் 'சீட்' மறுக்கப்பட்ட பாஜக தலைவர்கள்-அத்வானியிடம் மன்னிப்பு கேட்டார் பிரணாப்

சுதந்திர தினத்தன்று ராஷ்டிரபதி பவனில் விழா நடைபெற்றது. விலாஸ்ராவ் தேஷ்முக் மறைவு காரணமாக முதலில் இது ரத்து செய்யப்பட்டதாக கூறப்பட்டிருந்தது. இருப்பினும் பின்னர் நடைபெற்றது.
ராஷ்டிரபதி பவனில் உள்ள புகழ் பெற்ற முகல் கார்டனில் நடந்த இந்த விழாவில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, அமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பிரதமர் மன்மோகன் சிங்கும் கலந்து கொண்டார். அனைவரும் அமர்ந்து குடியரசுத் தலைவருடன் பேசுவதற்காக சீட்கள் போடப்பட்டிருந்தன.
ஆனால் பாஜக தலைவர்களான அத்வானி, சுஷ்மா சுவராஜ், அருண் ஜேட்லி ஆகியோருக்கு சீட் தரப்படவில்லை. இதனால் அவர்கள் நின்று கொண்டே இருந்தனர்.
இது சலசலப்பை ஏற்படுத்தி விட்டது. இதையடுத்து குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி அத்வானியை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு நடந்ததற்கு மன்னிப்பு கேட்டுக் கொண்டார். இது அதிகாரிகளின் கவனக்குறைவால் நடந்த தவறு. வேண்டும் என்றே பாஜக தலைவர்களை அவமதிக்கவில்லை என்று தெரிவித்தார் பிரணாப் முகர்ஜி.
குடியரசுத் தலைவர் மாளிகையில் அத்வானிக்கு இப்படி அவமரியாதை நேருவது இது 2வது முறையாகும். ஏற்கனவே குடியரசுத் துணைத் தலைவர் அன்சாரியின் பதவியேற்பின்போது அத்வானிக்கு 4வது வரிசையில் சீட் போட்டிருந்தனர்.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு ஒரு கள்ளத்தனமான அரசு என்று லோக்சபாவில் அத்வானி பேசியதற்கு காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தியிருந்தது. அதன் பிறகுதான் இப்படி அத்வானியை அவமானப்படுத்தும் வேலைகள் நடப்பதாக பாஜகவினர் குற்றம் சாட்டுகின்றனர்.












Click it and Unblock the Notifications