திருவண்ணாமலையில் மின் கம்பி அறுந்து விழுந்து 2 பெண்கள் பலி-6 பேர் காயம்
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் மழையில் அறுந்து விழுந்த மின் கம்பியை தெரியாமல் மிதித்த 2 பெண்கள் பலியாகினர். மேலும் 6 பேர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
திருவண்ணாமலையில் கடந்த ஒரு வாரமாக மழை பெய்து வருகிறது. இதில் நேற்று பெய்த மழையில் தானிப்பாடியை அடுத்த நாவாக்கொள்ளை அருகே இருந்த டிரான்ஸ்பார்மரின் மின் ஒயர் அறுந்து விழுந்தது. இது குறித்து அப்பகுதியினர், மின்சார வாரியத்திற்கு தகவல் கொடுத்தனர். ஆனால் மின்சார வாரியத்தினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்த நிலையில் நாவாக்கொள்ளை அருகே 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் இன்று காலை 10 மணியளவில் குளம் தூர்வாரும் பணி நடைபெற்றது. அப்போது பணியில் ஈடுபட்ட 8 பணியாளர்கள் நேற்று அறுந்து கிடந்த மின் ஒயர் மீது தெரியாமல் மிதித்தனர்.
இதில் பரமேஸ்வரி, தமிழ்செல்வி ஆகிய 2 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பலியாகினர். மற்ற 6 பேரும் படுகாயமடைந்து, திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து மின் வாரியத்தின் மீது அதிருப்தி அடைந்த அப்பகுதியினர் மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசாரும், மின் வாரிய அதிகாரிகளும், பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினர்.












Click it and Unblock the Notifications