மதுரை மலைவிழுங்கி பி.ஆர்.பி. அதிபரின் அனைத்து சொத்துகளையும் முடக்கி வைக்க தமிழக அரசு தீவிரம்

மதுரை மாவட்டம் மேலூர் சுற்றுவட்டாரங்களில் கிரானைட் குவாரிகளில் ரூ16 ஆயிரம் கோடிக்கு அளவுக்கு பி.ஆர்.பி. நிறுவனம் முறைகேட்டில் ஈடுபட்டது அம்லபமானது. இது தொடர்பாக மதுரை மாவட்ட ஆட்சியர் அன்சுல் மிஸ்ரா உத்தரவின் பேரில் கடந்த 2 வாரங்களாக சோதனை தொடர்ந்தும் நடைபெற்று வருகிறது. கிரானைட் குவாரி முறைகேட்டில் ஈடுபட்ட 18 பேர் தலைமறைவாகிவிட்டனர். இவர்களில் பி.ஆர்.பி. கிரானைட் குவாரி அதிபர் பழனிச்சாமி, மத்திய அமைச்சர் மு.க. அழகிரியின் மகன் துரை தயாநிதி உள்ளிட்டோர் முக்கியமானவர்கள். இவர்களில் 6 பேர் பாஸ்போர்ட்டுகள் ஏற்கெனவே முடக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் பி.ஆர்.பி. நிறுவனத்துக்கு சொந்தமான சொத்துகளை முடக்கும் நடவடிக்கையில் தமிழக அரசு தீவிரம் காட்டி வருகிறது. அந்நிறுவனத்தின் வங்கிக் கணக்குகளை முடக்கிய தமிழக அரசு, பி.ஆர்.பி.எக்ஸ்போர்ட் நிறுவனத்துக்கும் சீல் வைத்தது. இந்த நிறுவனத்துக்கு மாவட்ட ஆட்சியர் அன்சுல் மிஸ்ரா நேரில் சென்று சீல் வைத்தார்.
இதைத் தொடர்ந்து இன்று காலை முதல் பி.ஆர்.பி. நிறுவனத்துக்குச் சொந்தமாக இயக்கப்படும் அனைத்து பேருந்துகளையும் பறிமுதல் செய்யும் நடவடிக்கை தீவிரமடைந்து வருகிறது. மதுரை சுற்றுவட்டாரத்தில் இயக்கப்பட்டு வந்த பி.ஆர்.பி. பேருந்துகள் நடுவழியிலேயே மறிக்கப்பட்டு பயணிகளை இறக்கிவிட்டு காவல்நிலையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு வருகின்றன. இவற்றின் உரிமங்களை ரத்து செய்யவும் மாவட்ட நிர்வாகம் ஆலோசனை நடத்தி வருகிறது.












Click it and Unblock the Notifications