சுதந்திர தினத்தில் கூடங்குளத்தில் கருப்பு கொடி- உதயக்குமார், 2000 பேர் மீது வழக்கு
நெல்லை: கூடங்குளம் அணுமின் நிலையத்தை எதிர்த்து போராடி வரும் குழுவினர், நேற்று சுதந்திர தினத்தை முன்னிட்டு கருப்பு கொடி ஏற்றி, சவபெட்டி ஊர்வலம் சென்றனர். இதையடுத்து போராட்டத்தில் கலந்து கொண்ட போராட்ட குழுவை சேர்ந்த உதயக்குமார் உட்பட 2 ஆயிரம் பேர் மீது கொடி அவமதிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டது.
கூடங்குளம் அணுமின் நிலையத்தை எதிர்த்து, கடந்த ஒரு வருடமாக போராட்டம் நடைபெற்று வருகிறது. சுதந்திர தினத்தை முன்னிட்டு நேற்று மாலையில் தேசிய கொடிக்கு பதிலாக போராட்ட குழுவினர் கருப்பு கொடி ஏற்றி, சவபெட்டியுடன் ஊர்வலம் சென்றனர்.மேலும் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லவில்லை. கடைகளும் அடைக்கப்பட்டன. இடிந்தகரை தேவாலயத்தில் நடைபெற்ற இப்போராட்டத்தை குறித்து, விஜயாபதி கிராம நிர்வாக அதிகாரி செந்தில்குமரன், கூடங்குளம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
சுதந்திர தினத்தன்று தேசிய கொடியை அவமரியாதை செய்து, கருப்பு கொடி ஏற்றி ஊர்வலம் சென்றது தொடர்பாக, கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பு போராட்டக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் உதயக்குமார், தலைவர் புஷ்பராயன், பாதிரியார் மில்டன் உட்பட மொத்தம் 2 ஆயிரம் பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
மேலும் இடிந்தகரை தேவாலயத்தின் வளாகத்தில் அனுமதி இல்லாமல் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வரும் போராட்டக்காரர்கள் மீது தினமும் வழக்கு பதிவு செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பு போராட்டம் துவங்கி இன்றோடு ஒரு வருடம் நிறைவு பெறுகிறது. இதையடுத்து போராட்டத்திற்கு ஆதரவாக செயல்படும் அரசியல் தலைவர்களை அழைத்து போராட்ட கூட்டத்தில் பேச வைக்க முடிவு செய்துள்ளனர்.
ஆனால் கூடங்குளத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதால், போராட்டத்திற்கு ஆதரவாக பேச வரும் அரசியல் தலைவர்கள் மீது வழக்கு பதிவு செய்து, கைது செய்யப்படுவார்கள் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications