ஐ.ஏ.எஸ். அதிகாரியாக தகுதி உயர்வு வழங்கும் நடைமுறையில் பாரபட்சம்: தமிழக அரசு மீது புகார்
சென்னை: வருவாய்த்துறையில் மட்டும் பணியாற்றுவோருக்கு ஐ.ஏ.எஸ். தகுதி வழங்கும் தமிழக அரசின் நீண்டகால நடைமுறைக்கு இதர துறைகளில் பணிபுரியும் 100க்கும் மேற்பட்ட அதிகாரிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
மத்திய நிர்வாகத் தீர்ப்பாயத்தின் சென்னை கிளையில் இது தொடர்பான மனு ஒன்று அண்மையில் விசாரணைக்கு வந்தது. இந்த மனு மீது பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
விவகாரம் என்ன?
தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் மொத்த எண்ணிக்கை 355. இதில் 247 பேர் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். மற்ற 108 பேரும் மாநில பணிகளில் இருந்து தகுதி உயர்வு மூலம் ஐ.ஏ.எ.ஸ் அதிகாரிகளாக் கூடியவர்கள். இந்த 108 பேருமே வருவாய்த்துறையில் இருந்து தேர்ந்தெடுக்கப்படுகின்றனர் என்பதுதான் இதர துறைகளில் இருப்போரின் குமுறல்.
அதாவது வருவாய்த் துறையில் 750 பேர் அதிகாரிகளாகப் பணியாற்றுகின்றனர். கூட்டுறவுத் துறையில் 400, வணிக வரித்துறையில் 350, ஊரக வளர்ச்சித் துறையில் 500, பத்திரப் பதிவுத் துறையில் 400 பேரும் வேலைவாய்ப்புத் துறையில் 350 பேரும் அதிகாரிகளாகப் பணிபுரிகின்றனர். ஆனால் பொதுவாக இவர்களில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளாக தகுதி உயர்வு என்பது வருவாய்த்துறையினருக்கு மட்டுமே கிடைக்கிறது என்று 100க்கும் மேற்பட்ட வெவ்வேறு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் தீர்ப்பாயத்திடம் முறையிடு செய்தனர். 2ஆயிரத்துக்கும் மேற்பட்ட அதிகாரிகள் பணிபுரியும் நிலையில் 33 விழுக்காடு உள்ள வருவாய்த்துறையினருக்கு மட்டுமே ஐ.ஏ.எஸ். தகுதி வழங்கப்படுகிறது என்பது புகார். மாநில அரசின் அனைத்து துறைகளுமே மக்கள் சேவைக்கானவை என்கிறபோது வருவாய்த்துறைக்கு மட்டும் முன்னுரிமை கொடுப்பதை ஏற்க முடியாது என்பது இவர்களின் வாதம்.
மேலும் கடந்த பிப்ரவரி 16-ந் தேதி ஐ.ஏ.எஸ். அதிகாரிகளாக தகுதி உயர்வு கொடுத்து அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து அனைத்து துறைகளைச் சேர்ந்த அதிகாரிகளும் ஐ.ஏ.எஸ். தகுதி பெறும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் இவர்கள் கோரியுள்ளனர். இந்த மனு மீது பதிலளிக்குமாறு மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையத்துக்கு நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது.