நெல்லையில் ஓடும் ரயிலில் கர்ப்பிணி பெண்ணுக்கு பிரசவம்-ஆண் குழந்தை பிறந்தது
நெல்லை: நெல்லை அருகே ஓடும் ரயில் கர்ப்பிணி பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டு, அழகான ஆண் குழந்தையை பெற்றெடுத்தார்.
திருச்செந்தூர்-நெல்லை பயணிகள் ரயில் தினமும் காலை 6.40 மணிக்கு திருச்செந்தூரில் புறப்பட்டு 9 மணிக்கு நெல்லை சென்றடையும். நேற்று காலை 8.45 மணிக்கு திருச்செந்தூரில் இருந்து புறப்பட்ட இந்த ரயிலில் திசையன்விளை நடுவக்குறிச்சியைச் சேர்ந்த சுடலைநாதன் மனைவி கலைவாணி(29) மற்றும் அவரது உறவினர்கள் பயணம் செய்தனர்.
நிறைமாத கர்ப்பிணியாக இருந்த கலைவாணியை, நெல்லையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் பிரசவத்திற்காக சேர்க்க ரயிலில் கொண்டு சென்றனர். ஆனால் ரயில் பாளையங்கோட்டையை தாண்டியதும் கலைவாணிக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து கலைவாணிக்கு அவரது தாயார் கமலம், மாமியார் சொர்ணம் ஆகியோர் பிரசவம் பார்த்தனர்.
இதில் ஓடும் ரயிலிலேயே கலைவாணிக்கு ஆண் குழந்தை பிறந்தது. தகவலறிந்த நெல்லை ரயில்வே போலீசார் ஆம்புலன்ஸ் வர வழைத்து தாயையும், குழந்தையையும் பாதுகாப்பாக நெல்லையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஓடும் ரயிலில் குழந்தை பிறந்ததை தொடர்ந்து, பயணிகள் இடையே மகிழ்ச்சி ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications