பூனையை உயிரோடு ஓவனில் வைத்து சமைக்க முயன்ற 8 வயது சிறுவன்!
கென்ட்: இங்கிலாந்தை சேர்ந்த 8 வயது சிறுவன், பக்கத்து வீ்ட்டு பூனையை பிடித்து மைக்ரோவேவ் ஓவனில் வைத்து சமைக்க முயன்று பிடிபட்டுள்ளான்.
இங்கிலாந்து நாட்டின் கென்ட் நகரில் உள்ள ரோசிஸ்டர் என்ற ஊரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் குடும்பத்தினருடன் 8 வயது சிறுவன் ஒருவன் வசித்து வருகிறான். அவன் வீட்டிற்கு வந்த பக்கத்து வீட்டு பூனையை பிடித்து மைக்ரோவேவிற்குள் அடைத்து, சமைக்க முயன்றான்.
இந்த நிலையில் அடுக்குமாடி குடியிருப்பின் மேல் மாடியில் வசித்து வந்த பூனையின் உரிமையாளர், கீழ்தளத்திற்கு எதார்த்தமாக சென்ற போது தான், 8 வயது சிறுவனின் குறும்பு நடவடிக்கை தெரியவந்தது.
இதையடுத்து பூனையை மீட்ட உரிமையாளர், கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு பூனைக்கு அவசர சிகிச்சை அளிக்கப்பட்டது. பூனை தற்போது உயிரோடு இருந்தாலும், இதன் சில உறுப்புகள் பாதிக்கப்பட்டுள்ளன.
இது குறித்து மிருக வதை தடுப்பு பிரிவினர் மற்றும் போலீசார், சிறுவனிடம் விசாரித்து வருகின்றனர்.
இது குறித்து மிருத வதை தடுப்பு பிரிவின் இன்ஸ்பெக்டர் ரே பெய்லி கூறுகையில், இது போன்ற கொடூர செயலில் ஒரு சிறுவன் ஈடுபட்டிருப்பது மிகவும் ஆச்சரியமாக உள்ளது என்றார்.
சிறுவனுக்கு 10 வயது கூட பூர்த்தியாகாத நிலையில், அவன் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க முடியாமல் போலீசார் திணறுகின்றனர்.