விக்கிலீக்ஸ் அதிபரை கைது செய்ய ஈக்வடார் தூதரகத்துக்குள் அதிரடியாய் நுழைய லண்டன் போலீஸ் திட்டம்

செக்ஸ் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இங்கிலாந்திலிருந்து ஸ்வீடனுக்கு நாடு கடத்தப்படவுள்ளார் ஜூலியன் அசான்ஜ். இதையடுத்து தென் அமெரிக்க நாடான ஈக்வடாரில் புகலிடம் கோரியுள்ள அவர், அந் நாட்டின் லண்டன் தூதரகத்தில் கடந்த 2 மாதங்களாக வசித்து வருகிறார்.
அவரது கோரிக்கையை ஈக்வடார் நாடு பரிசீலித்து வரும் நிலையில், தூதரகத்தை விட்டு அசான்ஞ் வெளியில் வர மறுத்து வருகிறார்.
அவரை வெளியே அனுப்புமாறு ஈக்வடார் நாட்டு அரசுக்கு இங்கிலாந்து அரசு மிரட்டல் கடிதம் அனுப்பியது. இந்தக் கடிதத்தை ஈக்வடார் வெளியுறவு அமைச்சர் ரிச்சர்டோ பேட்டினோ நேற்று வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.
இந் நிலையில் அசான்ஜை அதிரடியாகக் கைது செய்ய இங்கிலாந்து அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக சர்வதேச சட்டங்களை மீறி ஈக்வடார் தூதரகத்துக்குள்ளேயே போலீசாரை அனுப்ப இங்கிலாந்து முடிவு செய்துள்ளது.
நேற்றிரவு முதல் அந்தத் தூதரகத்தை லண்டன் போலீசார் சுற்றி வளைத்து கண்காணிக்க ஆரம்பித்துள்ளனர்.
இங்கிலாந்து அரசின் இந்தச் செயல் சர்வதேச சட்டதிட்டங்களுக்கும் வியன்னா ஒப்பந்தத்துக்கும் விரோதமானது என ஈக்டவார் கூறியுள்ளது.
அசான்ஜுக்கு ஈக்வடார் நாடு புகலிடம் தந்தாலும் அவர் எப்படி தூதரகத்தை விட்டு வெளியே வந்து விமானம் ஏறுவார் என்பது தெரியவில்லை. அவர் தூதரகத்தை விட்டு வெளியே வந்துவுடனேயே அவரை இங்கிலாந்து கைது செய்துவிடும் என்பது உறுதி.
ஏன் இந்த கைது?:
அமெரிக்க வெளியுறவுத்துறை தலைமையகத்துக்கு அந் நாட்டின் தூதரகங்கள் பல்வேறு நாடுகளில் இருந்து அனுப்பிய ரகசிய தகவல்களை கைப்பற்றி அதை தனது விக்கிலீக்ஸ் இணையத்தளத்தில் வெளியில் உலகெங்கும் பரபரப்பை ஏற்படுத்தினார் அசான்ஞ்.
இதையடுத்து அவரது வங்கிக் கணக்குகள், நிறுவன வங்கிக் கணக்குகள், கிரெடிட் கார்டுகளை அமெரிக்காவும் இங்கிலாந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளும் முடக்கின. இதனால் இணையத்தளமே மூடப்படும் நிலைக்குச் சென்றது.
மேலும் அசான்ஞ் மீது அடுக்கடுக்கான வழக்குகளும் போடப்பட்டன. ஸ்வீடனில் ஒரு பெண்ணை கற்பழித்ததாகவும் வழக்குத் தொடரப்பட்டது. இதையடுத்து அவரை ஸ்வீடனுக்கு அனுப்ப இங்கிலாந்து முயற்சித்தது. ஆனால், அதை எதிர்த்து அசான்ஞ் தொடர்ந்த வழக்கில், அவருக்கு சாதகமாக தீர்ப்பு வரவில்லை. இதனால் எந்த நேரமும் ஸ்வீடனுக்கு நாடு கடத்தப்பட்டு அங்கு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படும் சூழல் உள்ளது.
இந் நிலையில் தனக்கு 2010ம் ஆண்டிலேயே புகலிடம் தர முன் வந்த ஈக்வடார் நாட்டின் உதவியை அசான்ஞ் நாடியுள்ளார்.
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்தவரான அசாஞன்சுக்கு அந் நாடு உதவி ஏதும் செய்ய முன் வராத நிலையில், அவர் ஈக்வடாரின் உதவியைக் கோரியுள்ளார். தான் ஸ்வீடனுக்கு அனுப்பப்பட்டால் அந் நாடு தன்னை அமெரிக்காவிடம் ஒப்படைத்துவிடும் என்பதால், அதைத் தவிர்க்க அசான்ஞ் முயற்சித்து வருகிறார்.












Click it and Unblock the Notifications