2ஜி: பிரதமர், தயாநிதிக்கு எதிராக ஊழல் கண்காணிப்பு இயக்ககத்தில் புகார்!
டெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் பிரதமர், முன்னாள் மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் தயாநிதி மாறன் ஆகியோருக்கு எதிராக தரப்பட்ட புகார் மீதான விசாரணை அறிக்கையைத் தாக்கல் செய்யுமாறு ஊழல் கண்காணிப்பு இயக்ககத்துக்கு டெல்லி தீஸ் ஹசாரி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக தகவல் பெறும் உரிமை சட்டத்தின் மூலம் பொது நல தகவல்களைப் பெறும் ஆர்வலர் விவேக் குமார் கர்க் என்பவர் தாக்கல் செய்த மனு நீதிபதி சங்கீதா திங்கரா முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது விவேக் வாதாடுகையில். 2008ம் ஆண்டில் மத்திய தொலைத்தொடர்பு அமைச்சராக ஆ.ராசா இருந்தபோது நடைபெற்ற ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டு முறைகேடு பற்றியே சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.
ஆனால், அதற்கு முன் மத்திய அமைச்சர்கள் குழு கடந்த 2006ம் ஆண்டில் தயாரித்த ஸ்பெக்ட்ரம் பயன்பாட்டு விதிமுறைகளைத் தனது வசதிக்கு ஏற்ப தயாநிதி மாறன் திருத்தினார்.
இது தொடர்பாக அவரே பிரதமருக்கு 2006ம் ஆண்டு பிப்ரவரி 28ம் தேதி கடிதமும் எழுதியிருக்கிறார். ஆனால், இந்த விவரத்தை சிபிஐ தனது விசாரணையில் எங்குமே பதிவு செய்யவில்லை.
ஸ்பெக்ட்ரம் ஒதுக்கும் நடைமுறை விதிகளைத் திருத்தியதுதான் முறைகேடு நடக்கவே காரணம். இது தொடர்பான ஆதாரங்களுடன் சிபிஐ தலைமையகத்தில் கடந்த ஆண்டில் புகார் அளித்தேன். ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதையடுத்து கடந்த 10 நாட்களுக்கு முன் டெல்லி ஊழல் கண்காணிப்பு இயக்ககத்திடம் புகார் அளித்தேன். அங்கும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றார் விவேக்.
இதைத் தொடர்ந்து விவேக் அளித்த புகார் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்ற விசாரணை நிலவர அறிக்கையை தாக்கல் செய்யுமாறு ஊழல் கண்காணிப்பு இயக்ககத்துக்கு நீதிபதி சங்கீதா உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications