பாகிஸ்தானிலிருந்து சாரை சாரையாக அகதிகளாக வரும் இந்துக்கள்
ஜெய்ப்பூர்: பாகிஸ்தானிலிருந்து பெருமளவிலான இந்துக்கள் தொடர்ந்து குடும்பம் குடும்பமாக இந்தியாவுக்கு வந்துகொண்டுள்ளனர். அனைவரும் இந்தியாவில் புகலிடம் கோரி வந்தவண்ணம் உள்ளனர்.
மூட்டை முடிச்சுகளுடன் அவர்கள் இந்தியாவுக்குள் வந்தவண்ணம் உள்ளனர். வட இந்தியாவில் உள்ள பல்வேறு ரயில் நிலையங்களில் இவர்களைக் காண முடிகிறது. அனைவரும் சம்ஜாதாஎக்ஸ்பிரஸ் ரயில் மூலம் வந்தவண்ணம் உள்ளனர்.
இதுகுறித்து அனில்குமார் என்பவர் கூறுகையில், நாங்கள் சட்டப்பூர்வமாகத்தான் வருகிறோம். எங்களை யாரும் தடுத்து நிறுத்த முடியாது. நான் என் குடும்பத்தோடு வந்து விட்டேன். என்ன விளைவு வந்தாலும் சந்திக்கத் தயாராகி விட்டேன் என்றார்.
அவர்கள் வருவதைப் பார்த்தால் தற்காலிகமாக தங்குவது போலத் தெரியவில்லை. மாறாக நிரந்தரமாக இங்கேயே வருவதாக தெரிகிறது. அந்த அளவுக்கு பாகிஸ்தானில் இந்துக்களுக்குப் பிரச்சினைகள் அதிகரித்து விட்டனவா என்று அனில்குமாரிடம் கேட்டால், எனக்குத் தெரிந்து அங்கு கொடுமை எதுவும்நடக்கவில்லை. எனக்கும் எந்தப் பிரச்சினையும் இல்லை என்றார்.
ஆனால் அதேசமயம், இந்துக்கள் அங்கு பெரும் கொடுமைக்குள்ளாகி வருவதாக அஜீத் குமார் என்ற சிந்தி இனத்தைச் சேர்ந்தவர் தெரிவித்தார். அவர் கூறுகையில், எங்களை அவர்கள் மோசமாக நடத்தினார்கள். அடித்தார்கள், திருடிக் கொண்டார்கள் என்றார்.அவருடன் 50 சிந்திக் குடும்பங்களும் இந்தியாவுக்கு வந்து விட்டன.
பாகிஸ்தானிலிருந்து இந்தியர்கள் பெருமளவில் வருவது குறித்து இந்தூர் சிந்தி மத்திய பஞ்சாயத்தின் நிர்வாகியான தீப்சந்த் சாவ்லா கூறுகையில், பாகிஸ்தானுக்கு எதிராக எதுவும் கூற மாட்டோம் என்று எழுதி வாங்கிக் கொண்டுதான் இவர்களை அனுப்பி வைத்துள்ளனர். இவர்கள் மிகவும் பயந்து போயுள்ளனர். இவர்களது குடும்பத்தினர் பலர் இன்னும்அங்கேயே உள்ளனர். ஆனால் இவர்கள் உயிரை துச்சமாக மதித்து இங்கு வந்துள்ளனர் என்றார்.
கடந்த 2011 ஜூலை மாதம் தனது மனைவியுடன்இந்தியாவுக்கு வந்து விட்ட 67 வயதான நானிக் ராம் லால்வானி என்பவர் கூறுகையில், இங்கு வந்துள்ள யாருமே திரும்பிப் போக விரும்பவில்லை என்றார்.
இதேபோல ஜோத்பூர் கராச்சி இடையிலான தார் எக்ஸ்பிரஸ் ரயில் மூலமும் நூற்றுக்கணக்கான இந்துக்கள் குடும்பத்தோடு கடந்த சிலவாரங்களில் இந்தியாவுக்கு வந்துள்ளனர்.
சிந்து மாகாணத்தில் குவாஸி அகமது நகரில் வசித்து வந்த 41 வயதான பரசோமல் மனுஷ்கானி என்பவர் தனது வீட்டையும், மருந்துக் கடையையும் விட்டு விட்டு தப்பி வந்துள்ளார். இவருக்கு 18 வயதில் மகள் உள்ளார். ஆனால் அவரை இவர் குவாஸி அகமது நகரிலேயே விட்டு விட்டு வந்துள்ளார். தனது மகளின் நிலையை நினைத்தால் அச்சமாக இருக்கிறது என்று கூறுகிறார் மனுஷ்கானி. இவரது சகோதரியை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு கும்பல் கடத்திக் கொண்டு போய் முஸ்லீமாக மாற்றி இன்னொருவருக்குத் திருமணம் செய்து வைத்து விட்டதாம்.
பாகிஸ்தானில் வாழும் இந்துக்களுக்குப் பெரும் நெருக்கடி நிலவுவதாக கூறப்படுகிறது. சிறுபான்மையினருக்கு அங்கு பல்வேறு விதமான அடக்குமுறைகள் இருப்பதால்தான் இந்துக்கள் குடும்பம் குடும்பமாக வெளியேறி வருவதாக பாகிஸ்தானைச் சேர்ந்த பத்திரிக்கை ஆசிரியர் ஆசாத் சன்டியோ என்பவர் கூறினார்.












Click it and Unblock the Notifications