144 தடை உத்தரவை மீறி இடிந்தகரையில் போராட்டம்: வைகோ, கொளத்தூர் மணி உள்பட 3,225 பேர் மீது வழக்கு
நெல்லை:கூடங்குளம் பகுதியில் அமலில் உள்ள 144 தடை உத்தரவை மீறி இடிந்தகரை போராட்டத்தில் கலந்து கொண்ட மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்பட 3,225 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
கூடங்குளம் அணு மின் நிலையத்தை எதிர்த்து இடிந்தகரையில் நடந்து வரும் போராட்டம் துவங்கி நேற்றுடன்
ஓராண்டு நிறைவடைந்தது. இதையடுத்து நேற்று போராட்டத்தின் 2வது ஆண்டு துவக்க விழா நடந்தது. இந்த விழாவில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, பெரியார் திக தலைவர் கொளத்தூர் மணி, தமிழ்தேச பொதுவுடமை கட்சியைச் சேர்ந்த ராசு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் (லெனின்) சேர்ந்த ரமேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அந்த கூட்டத்தில் வைகோ பேசியாதவது,
அணு மின் நிலையத்திற்கு எதிராக இடிந்தகரையில் நடக்கும் போராட்டம் ஓயாது. அணு உலை திட்டம் மக்களை அழிக்கும் திட்டம் என்பதால் அரசு தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும். அணு உலை திட்டம் வேண்டாம் என்று அரசியல் கட்சிகள் ஒரு செயல்திட்டத்தை தயாரித்து அதை செயல்படுத்த முன்வர வேண்டும்.
அணு உலை மிகவும் பாதுகாப்பானது என்று தான் அறிவியலாளர்கள் கூறுவார்கள். ஆனால் மக்களின் கருத்துக்களை அரசு மதிக்க வேண்டும். போராடி வரும் மக்களின் கருத்துக்களையும், உணர்வுகளையும் மதித்து அணு உலை திட்டத்தை செயல்படுத்தாமல் இருக்கத் தேவையான நடவடிக்கையை தமிழக அரசு எடுக்க வேண்டும் என்றார்.
கூடங்குளம் அணு மின் நிலையித்தில் உள்ள முதலாவது உலையில் விரைவில் யுரேனியம் நிரப்பப்பட உள்ளது. இதையொட்டி கூடங்குளம் பகுதியில் 7 கிமீ வரை 144 தடை உத்தரவு நீட்டிக்கப்ப்டடுள்ளது. இந்நிலையில் இத்தடையை மீறி போராட்டத்தில் கலந்து கொண்ட வைகோ உள்ளிட்ட 3,225 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications