தனியார் பஸ் டிரைவரை பழிவாங்க தண்டவாளத்தில் குண்டு வைத்த கேரள அரசு பஸ் டிரைவர்
திருவனந்தபுரம்: கோட்டயம் அருகே ரயில் தண்டவாளத்தில் சக்தி வாய்ந்த டிபன்பாக்ஸ் வெடிகுண்டை வைத்தது தொடர்பாக கேரள அரசு பஸ் டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
கேரள மாநிலம் கோட்டயம் அருகே உள்ள வெள்ளூரில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ரயில்வே தண்டவாளத்தில் டிபன்பாக்சில் சக்தி வாய்ந்த டெட்டனேட்டர்கள், ஒயர்கள் மற்றும் சிறு குழாய்கள் இணைக்கப்படாமல் இருந்தன. இது தீவிரவாதிகளின் சதி வேலையாக இருக்குமோ என்ற கோணத்தில் போலீசார் விசாரித்தனர். குண்டு கண்டுபிடிக்கப்பட்ட இடத்தில் ஒரு துண்டுச் சீட்டு கிடைத்தது. அதில் தாமஸ், இடக்காடு வயல் என்றும், ஒரு வாகன எண்ணும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதையடுத்து அந்த சீட்டில் குறிப்பிடப்பட்டிருந்த தாமஸ் என்ற தனியார் பஸ் டிரைவரை போலீசார் கண்டுபிடித்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரித்தபோது வெடிகுண்டுகளை தான் வைக்கவில்லை என்று கூறினார். தனக்கும் பிரவம் பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார் என்ற கேரள அரசு பஸ் டிரைவருக்கும் முன் விரோதம் இருந்ததாகவும் தெரிவி்த்தார். இதையடுத்து போலீசார் செந்தில்குமாரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் குண்டு வைத்ததை அவர் ஒப்புக் கொண்டார். தாமசை பழி வாங்குவதற்காக இவ்வாறு செய்ததாக அவர் தெரிவித்தார். இதையடுத்து செந்தில் குமாரையும் அவருக்கு உடந்தையாக இருந்த சந்தோஷ் என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications