யூடியூப் பிரபலம் வீடு புகுந்து அரிவாளுடன் மிரட்டல்.. தாக்குதல் நடத்திய NTK ராஜா பேரோன்.. குமரியில்!
கன்னியாகுமரி: கன்னியாகுமரியை சேர்ந்த யூடியூபரான அட்வகேட் நெல்சனை, நெல்லையைச் சேர்ந்த பாடி பில்டரும் சமூக ஊடகப் பிரபலமுமான ராஜா பேரோன், கடும் ஆயுதங்களோடு வீட்டிற்கே சென்று தாக்க முயன்ற சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
சமூக வலைதளங்களில் அட்வகேட் நெல்சன் என்பவர் வெளியிட்ட வீடியோக்கள் பேசுபொருளாகி வந்தன. கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த அதிமுக ஆதரவாளரான நெல்சன், திமுக, நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளையும் விமர்சித்து வீடியோக்கள் வெளியிட்டு வந்தார்.

தமிழக அரசியல் நிகழ்வுகள் தொடர்பாக தொடர்ந்து வீடியோ வாயிலாக பகிர்ந்து வரும் நெல்சன், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் நாதக முக்கிய நிர்வாகியான சாட்டை துருமுருகன் மீது தீவிர குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். அதில், திமுக கட்சியிலிருந்து பணம் பெற்று தற்போது புதியதாக அரசியலுக்கு வந்து உள்ள விஜய்யை நாதக கட்சியினர் கடுமையாக விமர்சித்து வருவதாக குறிப்பிட்டிருந்தார்.
இதையடுத்து சமூக வலைதளங்களில் நாம் தமிழர் கட்சி ஆதரவாளர்கள் நெல்சனை கடுமையாக விமர்சனம் செய்தனர். இந்நிலையில், நேற்று வெளியிட்ட ஒரு வீடியோவில் நெல்சன், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விருதுநகரில் தனது மனைவி பெயரில் ரூ.50 கோடி மதிப்பிலான சொத்தை குறைந்த விலையில் வாங்கியதாகவும் தனது யூடியூப் பக்கத்தில் பேசி வீடியோ வெளியிட்டுள்ளார்.
மேலும், அதே வீடியோவில், நாம் தமிழர் கட்சியின் தீவிர ஆதரவாளரும், பாடி பில்டிங் பயிற்சியாளருமான ராஜா பேரோன் மூலிகை மருந்தை உரிய அனுமதி இல்லாமல் விற்பனை செய்ததாகவும் குற்றம்சாட்டினார். இதையடுத்து, இன்று ராஜா பேரோனும் அவரது மனைவியும் நேரடியாக நெல்சன் வீட்டிற்கு சென்று தகராறில் ஈடுபட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
அப்போது, ஆதாரம் இல்லாமல் ஏன் பேசுகிறீர்கள் எனக் கேட்டு ஆவேசமாக வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும், அப்போது இரு தரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராஜா பேரோன் தனது பையில் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து காட்டி, மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ராஜா பேரோன், நெல்சனை குறிவைத்து உன்னுடைய சாவு என் கையில்தான் என உயிர் அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.
இந்த சம்பவத்தை கவனித்த அக்கம்பக்கத்தினர் தலையிட்டு என்ன பிரச்சனை என கேட்டு சமரசம் செய்ய முயன்றபோது, நிலைமை கைகலப்பாக மாறியது. அக்கம்பக்கத்தின ராஜா பேரோனை தாக்கி அங்கேயே அமர வைத்தனர். இதுதொடர்பான காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன.
இது தொடர்பாக தகவல் அறிந்த போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தி, காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தச் சம்பவம் தற்போது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications