தமிழகத்தை வெள்ள நீர் கால்வாய் போல நினைக்கிறது கர்நாடகா-ராமதாஸ் கடும் சாடல்

Subscribe to Oneindia Tamil

Ramadoss
சென்னை: இதன்மூலம் தமிழகத்தின் தேவைக்கு தண்ணீர் தரமாட்டோம் தமிழகத்தை வெள்ளநீரை வெளியேற்றுவதற்கான கால்வாயாக மட்டுமே பயன்படுத்துவோம் என்று கர்நாடக அரசு சொல்லாமல் சொல்லியிருக்கிறது. இது உச்சநீதிமன்றம், காவிரி நடுவர்மன்றம், மத்திய அரசு ஆகியவற்றுக்கு விடப்பட்ட சவால் ஆகும்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை:

காவிரி பிரச்சினை தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்துள்ள கர்நாடக அரசு, காவிரியில் உடனடியாக தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று தமிழகம் கோரமுடியாது, அப்படியே கோரினாலும் தமிழகத்திற்கு தண்ணீர் தரமுடியாது என்று கூறியிருக்கிறது.

தேசிய ஒருமைப்பாட்டு கொள்கைக்கும், நதிநீர் பகிர்வுக் கோட்பாட்டிற்கும் எதிரான கர்நாடக அரசின் இந்த நிலைப்பாடு கடுமையாக கண்டிக்கத்தக்கது. காவிரி நதிநீர் பகிர்வு பிரச்சினை பற்றி விசாரித்த காவிரி நடுவர் மன்றம், தமிழ்நாட்டில் குறுவை மற்றும் சம்பா சாகுபடி செய்வதற்கு வசதியாக ஒவ்வொரு மாதமும், ஒவ்வொரு வாரமும் குறிப்பிட்ட அளவு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று அதன் இடைக்காலத் தீர்ப்பிலும், இறுதி தீர்ப்பிலும் தெளிவாக குறிப்பிட்டிருக்கிறது.

ஆனால், நடுவர் மன்றம் வகுத்த அட்டவணைப்படி தண்ணீர் தரமுடியாது. டிசம்பர் மாதத்திற்குள் நாங்கள் விரும்பும் நேரத்தில்தான் காவிரியில் தண்ணீரை திறந்து விடுவோம் என்று உச்சநீதிமன்றத்தில் கர்நாடக அரசு கூறியிருக்கிறது.

இதன்மூலம் தமிழகத்தின் தேவைக்கு தண்ணீர் தரமாட்டோம் தமிழகத்தை வெள்ளநீரை வெளியேற்றுவதற்கான கால்வாயாக மட்டுமே பயன்படுத்துவோம் என்று கர்நாடக அரசு சொல்லாமல் சொல்லியிருக்கிறது. இது உச்சநீதிமன்றம், காவிரி நடுவர்மன்றம், மத்திய அரசு ஆகியவற்றுக்கு விடப்பட்ட சவால் ஆகும்.

கர்நாடக அரசின் இந்த பிடிவாதப் போக்கை கண்டிக்க வேண்டிய மத்திய அரசோ தொடர்ந்து அமைதி காத்து வருகிறது. அனைத்து மாநிலங்களுக்கும் பொதுவான மத்திய மின் தொகுப்பிலிருந்து ஏதேனும் மாநிலம் அளவுக்கு அதிகமாக மின்சாரம் எடுத்தால், அந்த மாநில தலைமைச் செயலாளருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்று மத்திய அரசு எச்சரிக்கை விடுத்திருக்கிறது.

அதேபோல், தமிழ்நாடு, கர்நாடகம், புதுவை, கேரளா ஆகிய 4 மாநிலங்களுக்கு பொதுவான காவிரி நீரை நாங்கள் மட்டுமே பயன்படுத்துவோம் என்று கூறும் கர்நாடக அரசையும் மத்திய அரசு எச்சரிக்க வேண்டும்.

சம்பா பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து செப்டம்பர் 17ம் தேதி முதல் தண்ணீர் திறந்து விடப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ள போதிலும், அணையில் இப்போதுள்ள தண்ணீரைக் கொண்டு சம்பா சாகுபடியை வெற்றிகரமாக முடிக்க முடியுமா? என்பது ஐயம்தான்.

கர்நாடகம் உடனடியாக தண்ணீர் திறந்துவிட்டால் மட்டுமே சம்பா சாத்தியமாகும். ஆனால், தண்ணீர் திறக்க முடியாது என்று கர்நாடகம் பிடிவாதம் பிடித்துவரும் நிலையில், அதை சமாளிப்பதற்கான திட்டங்களை வகுக்க வேண்டியது அவசியமாகிறது.

காவிரி பிரச்சினையில் கர்நாடக கட்சிகள் அரசியல் வேறுபாடுகளை மறந்து ஒன்றாக செயல்படுகின்றன. கர்நாடகத்துக்கு ரூ.2000 கோடி வறட்சி நிதி பெறுவது, காவிரி பிரச்சினை ஆகியவை குறித்து பிரதமரிடம் வலியுறுத்த தமது தலைமையில் அனைத்துக் கட்சி குழு டெல்லி செல்லும் என்று கர்நாடக முதல்வர் அறிவித்துள்ளார்.

அதேபோல், காவிரி பிரச்சினையில் தமிழக கட்சிகளும் ஒன்றுபட்டு குரல் கொடுக்க வேண்டும். இதற்காக அனைத்துக்கட்சித் தலைவர்கள் கூட்டத்தை தமிழக அரசு உடனடியாக கூட்டவேண்டும். அதில் எடுக்கப்படும் முடிவுகளை தமிழக முதல்வர் தலைமையிலான அனைத்துக் கட்சிக் குழு டெல்லி சென்று பிரதமரை சந்தித்து வலியுறுத்த வேண்டும் என்று கூறியுள்ளார் டாக்டர் ராமதாஸ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+