கல்வி உதவித் தொகையை கோல்மால் செய்த ஆதிதிராவிடர் நல அலுவலர் சஸ்பெண்ட்
நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் கல்வி உதவித் தொகை மோசடி விவகாரத்தில் தொடர்புடைய மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் ராமச்சந்திரன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
நாமக்கல் மாவட்ட ஆதி திராவிடர் நலத்துறை மூலம் பள்ளிக்கு வரும் அனைத்து குழந்தைகளையும் சுகாதாரக் குறைவான தொழில் செய்யும் பெற்றோரின் குழந்தைகள் என போலியாக பட்டியல் தயாரித்து ரூ.81 லட்சம் மோசடி நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதற்கு காரணமாக இருந்த 77 தலைமை ஆசிரியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
அவர்களிடம் விளக்கம் கேட்டு கடந்த 6ம் தேதி மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் அருள்மொழி தேவி நோட்டீஸ் அனுப்பினார். சஸ்பெண்டான தலைமை ஆசிரியர்கள் அளித்துள்ள விளக்க கடிதத்தில், ஆதி திராவிடர் நலத்துறை அலுவலகத்தில் இருந்து வந்த புரோக்கர்கள் எங்களை நிர்பந்தம் செய்து, விண்ணப்பத்தில் கையெழுத்து பெற்றுக் கொண்டனர் என்றும், அனைத்து குழந்தைகளும் தகுதியான குழந்தைகளா என்பதை கண்டறியும் பொறுப்பு ஆதி திராவிடர் நலத்துறை அதிகாரிகளுக்கே உள்ளது என்றும் குற்றம் சாட்டியிருந்தனர்.
இந்த நிலையில் இந்த மோசடிக்கு நாமக்கல் மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் ராமசந்திரன், கண்காணிப்பாளர் உமாபதி ஆகியோரும் உடந்தையாக இருந்ததாக மாவட்ட கலெக்டர் குமரகுருபரன் தமிழக அரசின் வருவாய்த்துறை செயலாளருக்கு கடந்த 6ம் தேதி அறிக்கை அனுப்பினார். இதனையடுத்து நாமக்கல் மாவட்ட ஆதி திராவிட கண்காணிப்பாளர் உமாபதியை மாநில ஆதி திராவிடர் நலத்துறை ஆணையர் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.
இந்த நிலையில் மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் ராமசந்திரனை சஸ்பெண்ட் செய்து தமிழக அரசின் வருவாய்த்துறை செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications