பிரதமரான பிறகு லோக்சபாவுக்கு 'ரெகுலராக' வரலாம் என்று நினைக்கிறாரோ ராகுல்?

15வது லோக்சபாவின் 3வது வருடத்தில் நடந்த நிகழ்வுகள் குறித்த ஒரு தொகுப்பு வெளியாகியுள்ளது.
ராகுல் 24
2011 மே முதல் 2012 மே வரையிலான காலகட்டத்தில் நடந்த 85 நாள் கூட்டத்தில், ராகுல் காந்தி மொத்தமே 24 நாட்கள்தான் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளார். அகிலேஷ் யாதவ் 31 நாட்கள் வந்துள்ளார். சித்து, குமாரசாமி ஆகியோர் தலா 16 நாட்கள் மட்டுமே வந்து போயுள்ளனர்.
ராசா 4 - சோனியா 34
மிக மிக குறைந்த அளவில் சபைக்கு வந்தவர்கள் பட்டியலில் முன்னாள் ஏ.ராசா முதலிடத்தில் உள்ளார். அவர் வெறும் 4 நாட்கள்தான் வந்துள்ளார். 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் சிக்கி கைதாகி சிறையில் அடைபட்டதால் அவரால் லோக்சபாவுக்கு வர முடியவில்லை. சுரேஷ் கல்மாடி 30 நாட்கள் வந்துள்ளார்.
சோனியா காந்தி மொத்தம் 34 நாட்கள் சபைக்கு வந்துள்ளார். அதிக நாட்கள் அவர் வர முடியாமல் போனதற்கு முக்கியக் காரணம், உடல்நல சிகிச்சைக்காக அமெரிக்கா போயிருந்ததுதான்.
அத்வானி 100
பாஜக மூத்த தலைவர் அத்வானி, ஜே.பி. அகர்வால், நிர்மல் கத்ரி, பி.எல்.பூனியா, தம்பித்துரை ஆகியோர் 100 சதவீத வருகையுடன் 'டிஸ்டிங்ஷன்' வாங்கியுள்ளனர்.
அதிக நிதியை செலவிட்டவர்கள்
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான தொகுதி வளர்ச்சி நிதியை அதிக அளவில் பயன்படுத்தியவர்கள் பட்டியலில் சுஷ்மா சுவராஜ், சோனியா காந்தி, அத்வானி ஆகியோர் முன்னணியில் உள்ளனர்.
சோனியா காந்தி ரூ. 2.32 கோடி செலவிட்டுள்ளார். அத்வானி ரூ. 1.71 கோடியை செலவிட்டுள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ் செலவிட்ட தொகை ரூ. 8.58 கோடியாகும்.
12,201 முறை கூச்சல் குழப்பம்
85 நாட்கள் நடந்த லோக்சபா கூட்டத்தில் மொத்தம் 12,201 முறை கூச்சல் குழப்பம் ஏற்பட்டுள்ளது. 110 முறை அவை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்தக் கூச்சல் குழப்பம், அமளி துமளி காரணமாக 175 மணி நேரம் 51 நிமிடங்கள் சபை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
விலைவாசி உயர்வு, நிலம் கையகப்படுத்துதல், சிஏஜி அறிக்கை, லோக்பால் மசோதா, நேரடி அன்னிய முதலீடுகள், ப.சிதம்பரம் ராஜினாமா கோரிக்கை உள்ளிட்ட பிரச்சினைகள்தான் பெரிய அளவில் அமளி துமளியை ஏற்படுத்தின.












Click it and Unblock the Notifications