களை கட்டிய ஓணம் பண்டிகை: அத்தப்பூ கோலமிட்டு கொண்டாட்டம்

ஓணம் திருவிழாவை மலையாள மொழி பேசும் மக்கள் அனைவரும் அறுவடை திருநாளாக கொண்டாடி மகிழ்கிறார்கள்.மலையாள ஆண்டின் சிங்கம் மாதத்தில் அஸ்தம்' நட்சத்திரம் தொடங்கி திருவோணம் நட்சத்திரம் வரையிலான 10 நாட்கள் இந்த விழா கொண்டாடப்படுகிறது.
10 நாட்களும் பத்து விதமான அலங்காரங்களுடன் ஓணம் களை கட்டும். முதல் நாளை அத்தம் என்றும், 2-ம் நாள் சித்ரா, 3-ம் நாள் சுவாதி, 4-ம் நாள் விசாகம், 5-ம் நாள் அனுசம், 6-ம் நாள் திருக்கேட்டை, 7-ம் நாள் மூலம், 8-ம் நாள் பூராடம், 9-ம் நாள் உத்திராடம், 10-ம் நாள் திருவோணம் என கொண்டாடி மகிழ்கின்றனர்.
திருவோணம் திருநாளன்று பாதாள உலகத்தில் இருந்து மகாபலி மன்னன் மலையாள மக்களை காண வருகிறார் என்பது ஐதீகம். தங்களை காண வரும் மன்னனை வரவேற்க வீடுகளை அலங்கரித்தும், அத்தப்பூ கோலமிட்டும், பலவகை காய்கறிகளைக் கொண்டு உணவு சமைத்தும் கொண்டாடி வருகின்றனர்.
ஏழையாக இருந்தாலும் ஓணப் பண்டிகை அன்று அறுசுவை உணவு தயாரித்து அதனை அக்கம்பக்கத்தினருக்கும், நண்பர்களுக்கும் உறவினர் களுக்கும் வழங்கி மகிழ்வார்கள். அதனால்தான் காணம் விற்றேனும் ஓணம் கொண்டாடேனும்' என்று மலையாள மக்களிடையே பழமொழி புழக்கத்தில் உள்ளது. இன்றைய ஓண சதய எனப்படும் விருந்தில் அடை, அவியல், பால் பாயாசம், அரிசி சாதம், பருப்பு, நெய், சாம்பார், காலன், ஓலன், ரசம், மோர், துவரம், சர்க்கரப் புரட்டி, கூட்டு, கிச்சடி, பச்சடி, இஞ்சிப்புலி, எரிசேரி, மிளகாய் அவியல், பரங்கிக் காய் குழம்பு, பப்படம், சீடை, ஊறுகாய் என இந்த பலவகை இருக்கும்.
விருந்துக்கு பிறகு ஆண்களும், பெண்களும் இணைந்து பல்வேறு நடனங்களை ஆடி மகிழ்வார்கள். ஓணப்பட்டுடுத்திய பெண்கள் அத்தப்பூ கோலத்தில் மீது குத்துவிளக்கு ஏற்றி வைத்து அதனை சுற்றி நடனமாடுவார்கள். மரத்தில் ஊஞ்சல் கட்டி ஆடி உற்சாகத்துடன் கொண்டாடி மகிழ்வர். ஆண்கள் புலிக்களி நடனம், களரி, கயிறு இழுத்தல், கடுவா ஆட்டம், எறி பந்து, கிளியாந்தட்டு, ஓண ஊஞ்சல் என நடக்கும் விளையாட்டுகள் மனதிற்கும், உடலுக்கும் உரம் சேர்க்கும் வகையில் இருக்கும்.
ஓணம் பண்டிகையை ஒட்டி தமிழ்நாட்டில் வாழும் மலையாள மக்களுக்காக தமிழக அரசு சார்பில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications