காஷ்மீரில் தீவிரவாதிகளை ஒடுக்க 'ஆளில்லா உளவு விமானங்களை' பயன்படுத்த ராணுவம் திட்டம்
ஆளில்லா உளவு விமானங்களின் பயன்பாடு உலகம் முழுவதும் அதிகரித்து வருகிறது. பாலஸ்தீனப் பகுதியை இஸ்ரேல் இந்த விமானங்கள் மூலம் தான் தொடர்ந்து கண்காணித்து வருகிறது.
ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளை அமெரிக்கா இந்த ரக விமானங்கள் மூலமே கண்காணிக்கிறது. முதலில் கண்காணிப்புக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்ட இந்த விமானங்களில் இப்போது ராக்கெட்களும் பொறுத்தப்பட்டு தீவிரவாதிகள் மீதான தாக்குதலுக்கும் அமெரிக்கா பயன்படுத்தி வருகிறது.
இந்த விமானங்கள் தரையில் இருந்தபடி ரேடியோ அலைகள் மூலம் கட்டுப்படுத்தப்படுகின்றன. அமெரிக்காவில் இருந்தபடியே இந்த விமானங்களை ஆப்கானில்தானில் இயக்குகின்றனர் அமெரிக்க உளவுப் பிரிவினரும் ராணுவத்தினரும்.
சீனாவும் தனது கடல் எல்லையைக் கண்காணிக்க இந்த விமானங்களை பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளது.
இந் நிலையில், இந்திய ராணுவமும் காஷ்மீரில் சிறிய ரக ஆளில்லா உளவு விமானங்களைப் பயன்படுத்த முடிவு செய்துள்ளது.
இதற்காக 20 விமானங்களை சப்ளை செய்ய சர்வதேச அளவில் டெண்டரை வெளியிட்டுள்ளது ராணுவம்.
10 கிலோவுக்கும் குறைவான எடையுடன் கூடியதாக, 1,000 மீட்டர் உயரத்தில் பறக்கக் கூடியவையாக இந்த விமானங்கள் இருக்க வேண்டும் என்று அந்த டெண்டரில் ராணுவம் குறிப்பிட்டுள்ளது.
தரையிலிருந்து வானில் கிளம்பி தொடர்ந்து 1 மணி நேரமாவது அது பறக்கும் திறன் கொண்டிருக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந் நிலையில் சட்டீஸ்கர், ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் காட்டுப் பகுதிகளில் நக்ஸல்களைக் கண்காணிக்கவும் ஆளில்லா உளவு விமானங்களைப் பயன்படுத்த மத்தியப் படைகள் திட்டமிட்டுள்ளன.