காதலியின் குடும்பத்தாரால் வாலிபர் எரித்துக் கொலை: 2 பேர் கைது
பிரோசாபாத்: உத்தர பிரதேசத்தில் வாலிபரை அவரது காதலியின் குடும்பத்தார் சேர்ந்து தீ வைத்து எரித்துக் கொலை செய்துள்ளனர்.
உத்தர பிரதேச மாநிலம் பிரோசாபாத் நகரில் உள்ள இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்த்(18). அவரும், அவரது பக்கத்து வீட்டில் வசிக்கும் ராணியும்(பெயர் மாற்றப்பட்டுள்ளது) கடந்த ஒன்றரை ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இந்த காதலுக்கு ராணியின் தந்தை கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு கோவிந்தை எச்சரிக்கையும் செய்துள்ளார்.
அப்படியும் கோவிந்த் காதலை முடித்துக் கொள்வதாக இல்லை. இதனால் ஆத்திரமடைந்த ராணியின் குடும்பத்தார் கடந்த சனிக்கிழமை கோவிந்தை தங்கள் வீட்டிற்கு அழைத்துள்ளனர். அங்கு சென்ற கோவிந்தை குடும்பத்தோடு சேர்ந்து தாக்கி, அவரது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீயை வைத்தனர். கோவிந்தின் அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். 90 சதவீத காயமைடந்த அவர் நேற்று சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இதற்கிடையே இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் ராணியின் தந்தை, தாய் ஆகியோரை கைது செய்தனர். ராணியின் சகோதரர் மற்றும் உறவினரைத் தேடி வருகின்றனர். விசாரணைக்காக ராணியையும் காவல் நிலையம் அழைத்துச் சென்றனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications