பெரம்பலூர் அருகே குட்டையில் குளிக்கச் சென்ற தந்தை, 2 மகன்கள் உள்பட 5 பேர் நீரில் மூழ்கி பலி
பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே குட்டையில் குளிக்கச் சென்ற தந்தை, 2 மகன்கள் உள்பட 5 பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக பலியாகினர்.
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள பெரியம்மாபாளையத்தைச் சேர்ந்தவர் விவசாயி மன்னாதி(45). அவருக்கு சிந்தனைச்செல்வன் (12), சுரேஷ்மேனன் (9) என்ற மகன்கள் இருந்தனர். சிந்தனைச்செல்வன் 6ம் வகுப்பும், சுரேஷ்மேனன் 3ம் வகுப்பும் படித்து வந்தனர். அதே ஊரைச் சேர்ந்த முருகேசன் என்பவரது மகன் சச்சின் (10), ஆறுமுகம் மகன் அருண்குமார் (13) ஆகியோர் மன்னாதியின் மகன்களின் நண்பர்கள். இதில் சச்சின் 4ம் வகுப்பும், அருண்குமார் 7ம் வகுப்பும் படித்து வந்தனர்.
அவர்கள் அனைவரின் வீடுகளும் அருகருகே உள்ளன. நேற்று வீட்டுக்கு அருகில் விளையாடிக் கொண்டிருந்த அந்த 4 பேரும் பெரியம்மாபாளையம்-மூங்கில்பாடி சாலையில் உள்ள குட்டையில் குளிக்கச் சென்றனர். அவர்களுடன் சென்ற மன்னாதி துணி துவைத்துக் கொண்டிருக்க சிறுவர்கள் குட்டையில் இறங்கினர். கடந்த சில நாட்களாக அந்த பகுதியில் பெய்து வரும் மழையால் அண்மையில் தோண்டப்பட்ட அந்த குட்டை நிரம்பியிருந்தது.
குட்டையில் இறங்கிய சிறுவர்கள் சேற்றில் மாட்டிக் கொண்டனர். தங்களை காப்பாற்றுமாறு அவர்கள் அலற அங்கு துணி துவைத்துக் கொண்டிருந்த மன்னாதி குட்டையில் இறங்கினார். ஆனால் அவரும் சேற்றில் மாட்டிக் கொண்டார். சில நிமிடங்களில் அந்த 5 பேரும் நீரில் மூழ்கி பரிதாபமாக பலியானார்கள்.
பின்னர் அவ்வழியாகச் சென்ற ஒருவர் குட்டையில் 5 உடல்கள் மிதப்பதைப் பார்த்து ஊருக்குள் சென்று கூறினார். உடனே ஊர் மக்கள் அங்கு ஓடி வந்தனர். தீயணைப்பு துறை மற்றும் மீட்பு படையினருடன் சேர்ந்து ஊர் மக்களில் சிலரும் குட்டைக்குள் இறங்கி உடல்களை மீட்டனர்.
இது குறித்து வழக்குப் பதிவு செய்த குன்னம் போலீசார் அந்த 5 பேரின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.












Click it and Unblock the Notifications