தூதர் கொலை: ஏவுகணைகளுடன் லிபியாவுக்கு விரைந்த 2 அமெரிக்க போர் கப்பல்கள், வீரர்கள்
வாஷிங்டன்: லிபியாவில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் மீது தாக்குதல் நடத்தி அந்நாட்டுக்கான அமெரிக்க தூதர் உள்பட 4 பேர் பலியானதையடுத்து 2 போர்கப்பல்களை லிபியாவுக்கு அமெரிக்கா அனுப்பியுள்ளது.
இஸ்லாம் மதத்தையும், முகம்மது நபியையும் கீழ்த்தரமாக சித்தரிக்கும் அமெரிக்கத் திரைப்படத்துக்குக் கண்டனம் தெரிவித்து லிபியா மற்றும் எகிப்து நாடுகளில் அமெரிக்கத் தூதரங்கள் மீது பயங்கர தாக்குதல்கள் நடந்தன. லிபியாவின் பெங்சாய் நகரில் நேற்று முன்தினம் இரவு நடந்த தாக்குதலில் லிபியாவுக்கான அமெரிக்க தூதர் கிறிஸ்டோபர் ஸ்டீபன்ஸ் மற்றும் 3 தூதரக அதிகாரிகள் பலியாகினர்.
இதையடுத்து அமெரிக்கா யுஎஸ்எஸ் லபூன் மற்றும் யுஎஸ்எஸ் மெக்பௌல் என்னும் 2 போர்க்கப்பல்களை லிபியாவுக்கு அனுப்பியுள்ளது. இதுதவிர ஐரோப்பில் உள்ள அமெரிக்க கடற்படை வீரர்கள் 50 பேர் லிபியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அந்த போர்க்கப்பல்களில் தொமாஹாக் ஏவுகணைகள் உள்ளன. அதிபர் ஒபாமா உத்தரவு கொடுத்தால் அவை ஏவப்படும் என்று கூறப்படுகிறது. இரண்டு கப்பல்களிலும் தலா 3,00 பேர் உள்ளனர்.
லிபியாவில் உள்ள அமெரிக்கர்களுக்கு பாதுகாப்பை பலப்படுத்துமாறும், உலகில் உள்ள அமெரிக்க தூதரங்களு்ககு கூடுதல் பாதுகாப்பு அளிக்குமாறும் அமெரிக்க அதிபர் ஒபாமா உத்தரவிட்ட சில மணிநேரத்திலேயே இந்த 2 கப்பல்கள் லிபியாவுக்கு கிளம்பின.
அவசர நிலை ஏற்பட்டால் அதை சமாளிக்கவே இந்த கப்பல்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
ஏமன் நாட்டில் அமெரிக்கத் தூதரகம் மீது தாக்குதல்:
இந் நிலையில் இன்று ஏமன் தலைநகர் சானாவில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தை ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டனர்.
போலீசார் விரைந்து வந்து துப்பாக்கிச் சூடு நடத்தி கூட்டத்தைக் கலைத்தனர்.












Click it and Unblock the Notifications