100 தோப்புக் கரணம் போட்ட மாணவன் காய்ச்சலில் படுத்து பலியான பரிதாபம்
ஹைதராபாத்: ஆசிரியைகள் 100 முறை தோப்புக் கரணம் போட வைத்ததால் மாணவன் ஒருவனுக்கு காய்ச்சல் ஏற்பட்டு பலியான சம்பவம் ஹைதாராபாத்தில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஹைதராபாத்தின் மதன்னபேட் பகுதியில் உள்ள ராயல் எம்பசி உயர்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்த மாணவன் பெயர் முகமது இஸ்மாயில் ஹுசைன். கடந்த செப்டம்பர் 3-ந் தேதியன்று பள்ளிக் கூடத்தில் மற்றொரு மாணவனுடன் இஸ்மாயில் தகராறு செய்ததாகக் கூறி ஆசிரியைகள் மொபினா பேகம் மற்றும் வாகித் ஆகியோர் 100 முறை தோப்புக் கரணம் போட வைத்திருக்கின்றனர்.
தோப்புக் கரணம் போட்டுவிட்டு வீட்டுக்குப் போன இஸ்மாயிலுக்கு காய்ச்சல் வந்திருக்கிறது. இதைத் தொடர்ந்து அவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். கடந்த 10 நாட்களாக சிகிச்சை பெற்றுவந்த இஸ்மாயில் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டான். இதனால் ஆத்திரமடைந்த மாணவனது பெற்றோரும் உறவினர்களும் பள்ளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
இதைத் தொடர்ந்து காவல்துறையிடமும் புகார் கொடுத்தனர். காவல்துறையினர் இரு ஆசிரியைகள் மீதும் கொலை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications