பிரம்மோற்சவம்: தமிழகத்தில் இருந்து திருப்பதிக்கு 25 சிறப்பு பேருந்துகள்
சென்னை: திருப்பதியில் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு தமிழகத்தின் முக்கிய நகரங்களில் இருந்து அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் கூடுதலாக 25 சிறப்பு பஸ்களை இயக்க உள்ளது.
திருமலை திருப்பதியில் வரும் 18ம் தேதி பிரம்மோற்சவம் துவங்குகிறது. இது வரும் 26ம் தேதி வரை தொடர்ந்து 9 நாட்களுக்கு நடைபெறுகிறது. இந்த பிரம்மோற்சவத்தில் தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.
இந்த நிலையில் திருப்பதிக்கு செல்லும் அனைத்து ரயில்களின் முன்பதிவுகளும் முடிந்துவிட்டது. அதேபோல் தமிழகத்தின் பல்வேறு முக்கிய நகரங்களில் இருந்து திருப்பதிக்கு இயக்கப்படும் 38 பஸ்களின் முன்பதிவும் 90 சதவீதம் வரை முடிவடைந்துவி்ட்டது. இதையடுத்து தமிழகத்தில் இருந்து திருப்பதிக்கு கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதனை ஏற்று தமிழக அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் வரும் 17ம் தேதி முதல் 27ம் தேதி வரை திருப்பதிக்கு கூடுதலாக 25 சிறப்பு பஸ்களை இயக்குகிறது. அதன்படி சென்னையில் இருந்து 7 பஸ்களும், சேலத்திலிருந்து 5ம், திருச்சியிலிருந்து 4ம், கோவையிலிருந்து 3ம், நாகர்கோவில், திருநெல்வேலி, மதுரை, கரூர், விழுப்புரம், வேலூர் ஆகிய நகரங்களில் இருந்து தலா 1 பஸ்ஸும் இயக்கப்பட உள்ளது.
இந்த சிறப்பு பஸ்களுக்கான முன்பதிவு தற்போது துவங்கி நடைபெற்று வருகின்றது என்பதால் இந்த வாய்ப்பை பொது மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications