சென்னை, கோவையில் விநாயகர் சிலைகளுக்கு பலத்த பாதுகாப்பு
சென்னை: விநாயகர் சதுர்த்தி விழாவிற்காக சென்னை, கோவை, திருப்பூர் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் அமைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகளுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
விநாயகர் சதுர்த்தி விழா புதன்கிழமையன்று நாடுமுழுவதும் வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. வடமாநிலங்களைப் போல தமிழ்நாட்டிலும் பிரம்மாண்ட சிலைகள் ஆங்காங்கே நிறுவப்பட்டு பூஜைகள் செய்யப்படுகின்றன.
சென்னையில் மொத்தம் 6,500 இடங்களில் விநாயகர் சிலைகள் பூஜைக்காக வைக்கப்பட்டுள்ளன. வருகிற 22-ந்தேதி முதல் இந்த சிலைகள் கடலில் எடுத்துச் சென்று கரைக்கப்படுகின்றன. இந்து முன்னணி சார்பில் வருகிற 23-ந்தேதி சென்னையில் 3 இடங்களில் இருந்து விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம் கடற்கரையில் கரைக்கப்படுகிறது. மேலும் விநாயகர் சிலை ஊர்வலம் 23, 24, 30 ஆகிய தேதிகளில் நடத்தப்படும் ஊர்வலத்திலும் ஆயிரக்கணக்கான சிலைகள் எடுத்துச் செல்லப்பட்டு கடலில் கரைக்கப்படுகின்றன. எண்ணூர், திருவொற்றியூர், காசிமேடு, பட்டினப்பாக்கம், நீலாங்கரை ஆகிய 5 இடங்களில் விநாயகர் சிலைகளை கடலில் கரைப்பதற்கு போலீசார் அனுமதி அளித்துள்ளனர். பூஜைக்காக வைக்கப்பட்டுள்ள 6,500 சிலைகளுக்கும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
கோவை, திருப்பூரில் பாதுகாப்பு
இதேபோல் திருப்பூர் மாவட்டத்தில் 1,010 இடங்களில் சிலைகள் அமைக்கப்பட்டு பூஜைகள் செய்யப்படுகின்றன. சிலைகளுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் 1,277 சிலைகள் அமைக்கப்பட்டு பூஜைகள் செய்யப்பட்டு வருகின்றன. 21 மற்றும் 23 ம் தேதி அங்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கரைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஊர்வலத்தின் போது அசாம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறாமல் தடுக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக மாநகர காவல்துறை ஆணையர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications