அவசரமாக கூடுகிறது திமுக செயற்குழு.. கனிமொழிக்கு அமைச்சர் பதவி கேட்காமல் இருந்தா சரி!!

இதுகுறித்து திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கை:
திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் 1.10.2012 திங்கட்கிழமை காலை 10.00 மணியளவில் திமுக தலைமை செயற்குழு அவசர கூட்டம் சென்னை, அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கில் நடைபெறும். அப்போது தலைமை செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், கழக முன்னணியினர் மீது, சகல பிரிவுகளிலும் பொய் வழக்குகளை ஜோடித்து; குறிப்பாக கொடுமை மிகுந்த குண்டர் சட்டத்தையே பயன்படுத்தி இயக்கத்தின் தளகர்த்தர்களை கடுமையான சிறைவாசத்திற்கு உள்ளாக்கி, முடக்கிவிட்டால்; எதிர்க்கட்சிகள் இயங்க முடியாமல் துவண்டு விடும் என்றும்; அந்த நேரம் பார்த்து நாடாளுமன்றம் மற்றுமுள்ள கூட்டுறவு தேர்தல் போன்றவற்றில் எதிர்ப்பு இல்லாமல் வென்றுவிடலாம் என்று அதிமுக ஆட்சியினர் இந்த செயல்களில் ஈடுபடுகிறார்கள். மேலும் ஈடுபடப்போகிறார்கள் என்பதை நம்மால் யூகித்து உணர முடிகிறது.
இதனை இப்பொழுதே, தொடக்கத்திலேயே தடுத்து நிறுத்தவேண்டும். முள் மரத்தை இளையதாக இருக்கும்போதே கிள்ளி விடாமல், அது முற்றி பலம் பெறுவதற்கும் முழுமையாகவே ஜனநாயகத்தை ஒழிக்கும் காரியத்தில் வெற்றி பெறுவதற்கும் அனுமதிக்காமல் தடுப்பதற்கு தயாராக தோள்தட்டி கிளம்ப வேண்டும். இல்லையேல் திராவிட இயக்கத்தை எத்தனையோ தியாகங்கள் செய்து; சோதனைகளிலும், வேதனைகளிலும் வெற்றி பெற்றுள்ள நமக்கு வீழ்ச்சி வந்து சேரும்.
இதை உணர்ந்து நம்முடைய வளர்ச்சிக்கு இன்றைய ஆளுங்கட்சியினர் தடையாக வெட்டுகின்ற பள்ளங்களில் வீழ்ந்து விடாமல் ஒவ்வொரு கழக தொண்டனும் தோள் தட்டி உயிர் வெல்லமல்ல; உயிரினும் மேலான கழகம் காப்போம் என சூளுரைத்திட அனைவரும் கூட்டத்தில் தவறாமல் கலந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம் என்று அவர் கூறியுள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தல், மத்திய அமைச்சரவையில் இடம்பெறுவது உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என்று தெரிகிறது. மத்திய அமைச்சரவையில் இரு கேபினட் பதவிகளை திமுவுக்குத் தர காங்கிரஸ் முன் வந்துள்ளது.
ஆனால், மத்திய அரசு இப்பவோ எப்பவோ என்று காலம் தள்ளுவதால் அதில் புதிதாக இரு அமைச்சர்களைச் சேர்க்க திமுக தலைவர் கருணாநிதி விரும்பவில்லை. ஆனாலும் 6 மாசமோ, ஒரு வருடமோ பதவியில் அமர்ந்துவிட வேண்டும் என்று டி.ஆர்.பாலுவில் ஆரம்பித்து பல எம்பிக்களிடமும் ஆசை பெருக்கெடுத்துள்ளது.
பழனிமாணிக்கம் போன்ற இணையமைச்சர்களுக்கு கேபினட் பதவியில் அமரவும் ஆசை. இதனால் ஸ்டாலின், அழகிரி மூலமாக கருணாநிதியை நெருக்கி வருகின்றனர். இந் நிலையில் இக் கூட்டத்தில் அமைச்சரவையில் புதிதாக இரு அமைச்சர்களை சேர்ப்பதா வேண்டாமா என்பது குறித்தும் விவாதிக்கப்படவுள்ளது.
கனிமொழிக்கு அமைச்சர் பதவி கேட்காமல் இருந்தா சரி!












Click it and Unblock the Notifications