17 ஆண்டுகளாக அலைக்கழிக்கப்பட்ட 70 வயது மூதாட்டிக்கு பட்டா வழங்க மதுரை ஹைகோர்ட் உத்தரவு
மதுரை: ஏழைகளுக்கு அரசு வழங்கிய நிலத்திற்கு பட்டா கேட்டு 17 ஆண்டுகளாக அலைந்த மூதாட்டிக்கு இன்னும் 2 மாதத்திற்குள் பட்டா வழங்க உயர் நீதிமன்றக் கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரை அவனியாபுரத்தைச் சேர்ந்தவர் மாரியம்மாள்(70). முன்னாள் ராணுவ வீரரின் மனைவி. நிலம் இல்லா ஏழைகளுக்கு நிலம் வழங்கும் சிறப்பு திட்டத்தின் கீழ் மாரியம்மாளுக்கு கடந்த 1966ம் ஆண்டு அவனியாபுரத்தில் 3.37 ஏக்கர் விவசாய நிலம் வழங்கப்பட்டது. கடந்த 1995ம் ஆண்டு அவர் தனக்கு வழங்கப்பட்ட நிலத்திற்கு பட்டா கேட்டு விண்ணப்பித்தார். ஆனால் அவருக்கு பட்டா வழங்க அதிகாரிகள் மறுத்தனர். இதையடுத்து அவர் உயர் நீதிமன்றக் கிளையில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு நீதிபதி எஸ். மணிக்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த அவர் தனது தீர்ப்பில் கூறியிருப்பதாவது,
நிலம் இல்லா ஏழைகளின் முன்னேற்றத்திற்காக சிறப்பு திட்டம் கொண்டுவரப்பட்டு நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. மனுதாரர் கணவர் முன்னாள் ராணுவ வீரர். அவர் நாட்டிற்கு செய்த சேவை மற்றும் மனுதாரரின் வறுமை காரணமாக அவருக்கு அரசு நிலம் ஒதுக்கியது. இதுபோன்றவர்களின் கோரிக்கைகளுக்கு அதிகாரிகள் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
அந்த நிலத்தை 36 ஆண்டாக தான் அனுபவித்து வருவதற்கு உரிய ஆவணங்களை மாரியம்மாள் வைத்துள்ளார். நிலத்தை மனுதாரர் விவசாயத்திற்கு பயன்படுத்தி வந்துள்ளார் என தாசில்தார் அறிக்கையிலும் கூறப்பட்டுள்ளது.
அவரது நிலத்திற்கு அருகே உள்ள நிலம் பிளாட்டாக மாற்றப்பட்டதால், இந்த நிலத்தையும் பிளாட்டாக மாற்றுவார் என அச்சப்பட தேவையில்லை. எனவே, மனுதாரருக்கு பட்டா மறுத்து பிறப்பித்த அனைத்து உத்தரவுகளும் ரத்து செய்யப்படுகின்றன. மாரியம்மாளிடம் 1990ம் ஆண்டின் சந்தை மதிப்பு கட்டணத்தை பெற்று 2 மாதத்தில் பட்டா வழங்க வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.