குமரியில் பஸ் நிலையம் திறக்க மறியல்: முன்னாள் திமுக அமைச்சர் மீது வழக்கு பதிவு
குமரி: குமரி மாவட்டத்தின் பனச்சமூடு பஸ் நிலையத்தை விரைவில் திறக்க கோரி, திமுகவினர் மறியல் போரட்டம் நடத்தினர். தடையை மீறி மறியலில் ஈடுபட்ட திமுக மாவட்ட செயலாளர் மற்றும் எம்.பி உட்பட பலர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
குமரி மாவட்டம் பனச்சமூடு பேருந்து நிலையத்தை திறந்து பஸ்கள் வந்து செல்ல நடவடிக்கை எடுக்க கோரி, பனச்சமூட்டில் திமுக சார்பில் மறியல் போராட்டம் நடந்தது. திமுக மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சுரேஷ் ராஜன், ஹெலன் டேவிட்சன் எம்.பி, புலியூர் சாலை பஞ்சாயத்து தலைவர் ரசலையன், மேல்புறம் ஒன்றிய திமுக செயலாளர் சிற்றார் ரவிச்சந்திரன் மற்றும் பொதுமக்களும் மறியல் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
இந்த மறியல் போராட்டம் நடத்த போலீசாரின் தடை உத்தரவு இருந்தும் திமுகவினர் கண்டுகொள்ளவில்லை. இந்த நிலையில் மறியல் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்களிடம், போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் பஸ் நிலையத்திற்குள் பஸ்கள் வந்து செல்ல விரைவில் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளிக்கப்பட்டது.
இதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜன், ஹெலன் டேவிட்சன் எம்.பி மற்றும் மறியலில் ஈடுபட்டோர் மீது அருமனை போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.












Click it and Unblock the Notifications