டக்ளஸ் ஆஜராகித்தான் ஆக வேண்டும்- பிடிவாரண்ட் ரத்து கிடையாது: சென்னை கோர்ட் அதிரடி!
சென்னை: சென்னை இளைஞரை சுட்டுக் கொன்ற வழக்கில் தமக்கு எதிராகப் பிறப்பிக்கப்பட்ட பிடிவாரண்ட்டை ரத்து செய்ய கோரி இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தாக்கல் செய்த மனுவை சென்னை அமர்வு நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்துவிட்டது.
வழக்கு என்ன?
தமிழகத்தில் 1980களில் இலங்கை போராளிகள் அமைப்பினர் சுதந்திரமாக நடமாடி வந்தனர். அப்போது தகராறு ஒன்றில் 1986ஆம் ஆண்டு நவம்பர் 1-ந் தேதியன்று சென்னை சூளைமேட்டில் அப்பாவியான திருநாவுக்கரசு என்பவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். இவரை சுட்டது டக்ளஸ் தேவானந்தா என்பதால் அவர் மீது கொலைக் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. இதனால் டக்ளஸ் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுதலையாகினர்.
பிடிவாரண்ட்- தேடப்படும் குற்றவாளி
இந்த நிலையில் அரசியல் மாற்றங்களால் டக்ளஸ் தேவானந்தா இலங்கைக்குப் போய்விட்டார். ஆனால் இந்த வழக்கின் விசாரணையில் அவர் ஆஜராகவில்லை. இதனால் 1990-ம் ஆண்டு சென்னை அமர்வு நீதிமன்றம் டக்ளஸ் தேவானந்தாவுக்கு எதிராக பிணையில் வெளிவர முடியாத பிடிவாரண்ட்டை பிறப்பித்தது. அத்துடன் 1994-ம் ஆண்டு தேடப்படும் குற்றவாளியாகவும் பிரகடனப்படுத்தப்பட்டார்.
மீண்டும் சூடுபிடித்த வழக்கு
இதனிடையே தேடப்படும் குற்றவாளியான டக்ளஸ் தேவானந்தாவை கைது செய்யக் கோரி சென்னை நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் டக்ளஸ் தேவானந்தாவுக்கு நோட்டீஸ் அனுப்பியது. அப்போது தமக்கு எதிராக பிறப்பிக்கப்பட்டிருக்கும் பிடிவாரண்ட்டை ரத்து செய்ய வேண்டும் என்றும் வீடியோ கான்பரன்ஸ் மூலம் விசாரணை நடத்த வேண்டும் என்றும் டக்ளஸ் கோரியிருந்தார்.
மனு தள்ளுபடி
இம்மனு மீது சென்னை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. விசாரணையின் முடிவில் டக்ளஸ் தேவானந்தா மனு தள்ளுபடி செய்யப்பட்டது. மேலும் மனுவைத் தள்ளுபடி செய்த நீதிபதி, மனுதாரர் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள நிலையில், பல ஆண்டுகளாக அவர் வழக்கில் ஆஜராகாமல் இருந்து வருகிறார். ஆகவே, அவர் இந்த நீதிமன்றத்தில் முதலில் ஆஜராக வேண்டியது அவசியமாக உள்ளது. இந்த சூழலில் பிடியாணையை ரத்து செய்து, தன்னிடம் விடியோ கான்ஃபரன்ஸிங் மூலம் விசாரணை நடத்த வேண்டும் என்ற மனுதாரரின் கோரிக்கையை ஏற்க இயலாது என்று கூறினார்.












Click it and Unblock the Notifications