சர்ச்சைக்குரிய தென்மண்டல ஐஜி ராஜேஷ் தாஸ் சென்னைக்கு திடீர் மாற்றம்

தென்மாவட்டங்களில் அடுத்தடுத்து பல்வேறு பெரும் பிரச்சினைகள் ஏற்பட்டன. அவற்றை சரிவர கையாளவில்லை ராஜேஷ் தாஸ் என்ற புகார் இருந்து வந்தது.
குறிப்பாக முல்லைப் பெரியாறு அணை விவகாரப் பிரச்சினை மற்றும் கூடங்குளம் பிரச்சினை. இந்த இரண்டு பிரச்சினைகளிலும் அவர் அடக்குமுறையைக் கையாண்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதிலும் முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினை தொடர்பாக தேனி மாவட்ட மக்கள் கொதித்தெழுந்து கேரளாவுக்கு எதிராக போராடியபோது அதை ஒடுக்கியவர் ராஜேஷ் தாஸ் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழக விவசாயிகளின் போராட்டத்தைக் கொச்சைப்படுத்திப் பேசினார் என்றும் சர்ச்சை எழுந்தது. அப்போதே ராஜேஷ் தாஸை மாற்ற வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது.
அதேபோல கூடங்குளம் போராட்ட விவகாரத்திலும் ராஜேஷ் தாஸின் அணுகுமுறை கடும் அதிருப்தியை அரசுக்குப் பெற்றுக் கொடுத்தது.
அதை விட உச்சமாக கடந்த ஆண்டு பரமக்குடியில் இமானுவேல் சேகரன் குருபூஜையின்போது போலீஸார் கண்மூடித்தனமாக நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஐந்து தலித் மக்கள் பரிதாபமாக கொல்லப்பட்டனர். இதுவும் ராஜேஷ் தாஸின் அணுகுமுறைத் தவறை அம்பலப்படுத்தியது.
அதேபோல சமீபத்தில் நடந்த தேவர் குருபூஜை சமயத்தில் நடந்த பயங்கர மோதலில் ஒரு சப் இன்ஸ்பெக்டர் கொடூரமாகக் கொல்லப்பட்டார். அதேபோல 6 தேவர் சமுதாயத்தினர் கொல்லப்பட்டதால் ராஜேஷ் தாஸின் பெயர் மேலும் கெட்டுப் போனது.
பரமக்குடி கலவரம், கூடங்குளம், முல்லைப் பெரியாறு என ராஜேஷ் தாஸ் சர்ச்சையில் சிக்கியபோதெல்லாம் மாற்றாத அரசு, தற்போது அதிமுகவின் முக்கிய வாக்கு வங்கியான தேவர் சமுதாயத்தினரிடையே கடும் அதிருப்தி எழுந்ததைத் தொடர்ந்து தூக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில்தான், ஐ.ஜி.ராஜேஸ்தாஸ் அப்பொறுப்பிலிருந்து தூக்கப்பட்டு சென்னைக்கு மாற்றப்பட்டுள்ளார். அவர் உள்பட 5 ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்கு பணியிட மாற்றம் அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை நகர காவல்துறையின் குற்றவியல் பிரிவு கூடுதல் கமிஷனராக பணியாற்றி வந்த அபய்குமார் சிங், தென்மண்டல ஐஜி-யாக நியமிக்கப்பட்டுள்ளார்.
நெல்லை டூ சென்னை
இதுதவிர சென்னை மாநகர போலீஸ் தலைமையகத்தில் கூடுதல் கமிஷனராக பணியாற்றிய சுனில்குமார் சிங்,நெல்லை போலீஷ் கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
நெல்லை போலீஸ் கமிஷனராக பணியாற்றி வந்த கருணாசாகர், சென்னை மாநகர காவல்துறையின் போக்குவரத்து கூடுதல் கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
போக்குவரத்து காவல் துறையின் கூடுதல் கமிஷனர் சஞ்சய் அரோரா,சென்னை மாநகர காவல்துறை தலைமையகத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications