கூடங்குளம் போராட்டக்காரர்களை ஜெயலலிதா ஆதரித்தது நாராயணசாமிக்கு தெரியாதா?: கருணாநிதி
சென்னை: கூடங்குளம் அணுமின் நிலையம் போன்ற தொழில் வளர்ச்சி சாதனங்களுக்கு நாங்கள் ஒன்றும் எதிரிகள் இல்லை என்று திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

ஒரு வாரப் பத்திரிகைக்கு மத்திய இணை அமைச்சர்களில் ஒருவரான நாராயணசாமி கூடங்குளம் விஷயத்தில் திமுக முதலில் ஆதரவு கொடுத்தது, பிறகு பின் வாங்கிவிட்டது. எனவே திமுக எங்களுக்குத் தேவையில்லை. ஜெயலலிதா ஆதரவு போதும் என்று கூறியதாக அந்தப் பத்திரிகையில் பேட்டியாக வந்திருக்கிறதே?
அதற்கு என்ன பதில் சொல்கிறீர்கள் என்று திமுக தலைவர் கருணாநிதியிடம் கேட்டபோது, அவர் அளித்த பதில் வருமாறு:
கூடங்குளம் அணுமின் நிலையத்தை திமுக எதிர்ப்பதைப் போலவும், ஜெயலலிதா ஆதரிப்பதைப் போலவும் பேட்டி கொடுத்திருக்கிறார். ஆனால் ஒன்று! கூடங்குளம் அணுமின் நிலையத்தின் பணிகளையெல்லாம் ஒத்திவைத்துவிட்டு, அந்தப் பகுதி மக்களுக்கெல்லாம் தெளிவுபடுத்திய பிறகுதான், பணிகளைத் தொடர வேண்டுமென்று தமிழக அரசின் சார்பில் அமைச்சரவையைக் கூட்டி தீர்மானம் நிறைவேற்றி, பிரதமருக்கு அனுப்பி வைத்தவர் ஜெயலலிதா. கூடங்குளத்தில் போராட்டம் நடத்தியவர்களையெல்லாம் தலைமைச் செயலகத்திலேயே சந்தித்து அவர்களுக்கு ஆதரவு கரம் நீட்டியவர் ஜெயலலிதா.
இவையெல்லாம் மத்திய இணை அமைச்சர் நாராயணசாமிக்கு தெரியாமலே போய்விட்டதா?.
நாட்டு மக்களுக்காக, நாட்டின் முன்னேற்றத்திற்காக சொல்கிறேன். என்றைக்கும் கூடங்குளம் போன்ற தொழில் வளர்ச்சி சாதனங்களுக்கு நாங்கள் எதிரிகள் அல்ல. விஞ்ஞான ரீதியாக தமிழகத்தில் தொழில் வளர வேண்டும் என்று ஆசைப்படுகிறவர்கள் தான் நாங்கள்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications