சிரியா நாட்டு போராளிகளுக்கு பிரான்ஸ் அங்கீகாரம்: ஆயுதங்கள் தரவும் திட்டம்!

இதன்மூலம் சிரிய அரசுக்கு எதிராக அரசியல், தூதரகரீதியில் கடுமையான முடிவை பிரான்ஸ் எடுத்துள்ளது. பிரான்ஸைத் தொடர்ந்து அமெரிக்கா மற்றும் பிற ஐரோப்பிய நாடுகளும் இந்த முடிவை எடுத்தால் ஆசாதுக்கு பெரும் சிக்கல் ஏற்படும்.
கடந்த 22 மாதங்களாக சிரியாவில் பெரும் உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது. பல்வேறு அமைப்புகளாகப் பிரிந்து கிடக்கும் சிரிய போராளிகள் அரசுக்கு எதிராக குண்டுவெடிப்புகளை நடத்தி வருவதோடு, ராணுவத்தினரையும் தாக்கி வருகின்றனர். இதையடுத்து ராணுவத்தினரைக் கொண்டு போராளிகளை கொன்று குவித்து வருகிறார் ஆசாத்.
இந் நிலையில் ஆசாத் பதவி விலக வேண்டும் என்று அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் கோரி வருகின்றன. இந்த நாடுகளின் ஆதரவோடு சிரியா மீது துருக்கி, இஸ்ரேல் ஆகியவை கூட அவ்வப்போது சிரியா மீது ஏதாவது ஒரு காரணத்தைக் கொண்டு தாக்குதல் நடத்தி வருகின்றன.
ஆனால், பதவி விலக மறுத்து வருகிறார் ஆசாத். இந் நிலையில் போராளிக் குழுக்களைச் சேர்ந்தவர்கள் நேற்று முன்தினம் கத்தாரில் சந்தித்து ஆலோசனை நடத்தினர். அப்போது Syrian National Council என்ற பெயரில் அனைவரும் இணைந்து செயல்படுவது என்ற முடிவு எடுக்கப்பட்டது.
இந் நிலையில், இவர்களுக்கு பிரான்ஸ் ஆதரவு தெரிவித்துள்ளது. இது குறித்து பிரான்ஸ் அதிபர் பிராங்காய்ஸ் ஹோலாண்டே கூறுகையில், Syrian National Council அமைப்பை பிரான்ஸ் அங்கீகரிக்கிறது. ஆசாதை எதிர்த்துப் போராடும் அமைப்புகள் இணைந்து ஒரு (போட்டி) அரசை அமைத்தால் அவர்களுக்கு ஆயுத உதவிகள் தரப்படும். அங்கு ஜனநாயகத்தைக் கொண்டு வரவே இந்த நடவடிக்கையை எடுக்கிறோம் என்றார்.
சிரியாவில் ஆசாதுக்கு ஷியா முஸ்லீம்களின் ஆதரவு உள்ளது. அவரை சன்னி பிரிவு முஸ்லீம்கள் எதிர்த்து வருகின்றன.
அதே போல ஈரான், லெபனான் போன்ற ஷியாக்கள் அதிகம் உள்ள நாடுகள் ஆசாதை ஆதரிக்கின்றன. ஆனால், செளதி, கத்தார் உள்ளிட்ட சன்னி பிரிவு நாடுகள் அவரை எதிர்த்து வருகின்றன. இந்த நாடுகள் தான் ஆசாத் எதிர்ப்புப் படையினருக்கு ஆயுத உதவிகளும் நிதி உதவியும் தந்து வருகின்றன. இந்த நடவடிக்கைகளுக்கு அமெரிக்காவின் மறைமுக ஆதரவு உள்ளது.
அதே நேரத்தில் ரஷ்யாவும் சீனாவும் ஆசாதுக்கு ஆதரவு தந்து வருகின்றன.
ஆசாத் குடும்பத்தினர் சிரியாவை 42 ஆண்டுகளாக ஆண்டு வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications