சபரிமலையில் குவிந்த ஐயப்ப பக்தர்கள்- இன்று தொடங்கியது 48 நாள் மண்டல பூஜை!
சபரிமலை: கார்த்திகை மாதம் இன்று பிறந்தைத் தொடர்ந்து இன்று அதிகாலை முதல் வழிபாடுகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.
கேரள மாநிலம் சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலில் நடைபெறும் மண்டல பூஜை வழிபாட்டில் உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் விரதமிருந்து, இருமுடிகட்டி வந்து வழிபாடு நடத்துவர்
இந்த ஆண்டு மண்டல பூஜை வழிபாடு கார்த்திகை முதல் நாளான இன்று துவங்குவதால், கோவில் நடை நேற்று திறக்கப்பட்டது. முதல் நாளிலேயே ஐயப்பனைத் தரிசனம் செய்து, நெய் அபிஷேகம் செய்ய ஏராளமான பக்தர்கள் பம்பையில் முகாமிட்டிருந்தனர். இவர்கள் நேற்று காலை பம்பையில் இருந்து மலைவழி நடைபாதையில் சபரிமலை செல்ல அனுமதிக்கப்பட்டனர். இதனால் சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் இருந்தது.
மாலையில் ஐயப்பன் கோவில் மேல்சாந்தி பாலமுரளி நம்பூதிரி, ஆலயத்தை சுற்றிவந்து 18 ஆம் படி நடை திறந்து, ஐயப்பன் சன்னிதான நடையைத் திறந்துவைத்து, நெய்விளக்கு ஏற்றினார். இதைத் தொடர்ந்து இருமுடி கட்டிவந்த பக்தர்கள் 18 ஆம் படி ஏறி சுவாமி தரிசனம் செய்தனர்.
இன்று காலை 4 மணிக்கு, புதிய மேல்சாந்தி தாமோதரன் நம்பூதிரி 18 ஆம் படி நடைதிறந்து ஆலயப் பிராகாரம் சுற்றிவந்து, ஐயப்பன் சன்னிதியைத் திறந்து வைத்து அணையா விளக்கை ஏற்றிவைத்தார். இதைத் தொடர்ந்து இன்று முதல் 48 நாள் மண்டல பூஜை வழிபாடு ஐயப்பனுக்குத் துவங்கியது.